அறப்போராட்டத்திலும் ,ஆயுதப் போராட்டத்திலும் தடம்பதித்தவர் கோவிந்தசாமி ஐயா!

அறப்போராட்டத்திலும் ,ஆயுதப் போராட்டத்திலும் தடம்பதித்தவிடுதலை முழக்கம் கோவிந்தசாமி ஐயா (மேஜர் தேனாடான்)

               13வது ஆண்டு நினைவு  05,05. 2022

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி தங்களையே தமிழீழ தாய் மண்ணுக்கு உரமாக்கிய ஆயிரமாயிரம் போராளிகளில் கோவிந்தசாமி ஐயாவும் ஒருவராகின்றார்.

இரண்டு வழி போராட்டப் பாதையிலும் தடம் பதித்தவர் என்றவகையில் நாம் அறிந்த முதல் மனிதராகவே கோவிந்தசாமி ஐயாவை வரலாற்றில் பதிவு செய்கின்றோம்.

விடுதலைப்போராட்டத்துக்கு நீண்ட வரலாறு இருப்பதைப்போல இவருக்கும் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை நீண்ட வரலாறு உண்டுஎன்பதை யாரும் மறுக்கமுடியாது. கண்ணாடிகோவிந்தர் என்றும் கோவிந்த ஐயா என்றும் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட கோவிந்தசாமி ஐயாவை நாம் எப்போதாவது கண்ணாடி இன்றி பார்த்தது கிடையாது.

இவருடைய சொந்த ஊர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை என்கின்ற பழந்தமிழ் கிராமமாகும். இக்கிராமத்துக்கும் எமது விடுதலை போராட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் நிலத்தொடர்புமூலம் காடுகளுக்குள் இலகுவாக செல்லும்பாதையாக வந்தாறுமூலை விளங்கியதால் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால தங்குமிடங்களில் ஒன்றாக வந்தாறுமூலை கிராமமும், களுவன்கேணி கடக்கரை பிரதேசமும் அதற்கு பாதுகாப்பு அரணாக வந்தாறுமூலை மக்களும், களுவன்கேணி மக்களும் இருந்தனர்.

இம் மக்கள் தங்கள் செல்லப்பிள்ளைகளாகவும் மிகவும் நெருங்கிய உறவுகளாகவும் விடுதலைப் புலிகளை நேசித்ததனால் விடுதலைப் புலிகள் இக்கிராம சூழலில் தங்களின் போராட்டச் செயல்பாடுகளில் உறுதியாக நடந்து கொள்வதற்கு உதவியாக அமைந்தன. வயது வேறுபாடு இன்றி ஒவ்வொரு மக்களும் விடுதலைப் புலிகளை தங்களின் காவல் தெய்வங்களாகவும் விடுதலைப் போராட்ட வீரர்களாகவும் பார்த்து உணவு உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கிவந்தனர். இவ்வாறான உணர்வான மக்கள் மத்தியிலிருந்து விடுதலைப் போராட்டத்துக்கு கால் பதித்தவர்தான் எங்களின் அன்பான கோவிந்தசாமி ஐயா அவர்களும் ஆகும்.

மட்டக்களப்புக்கு தளபதி அருணா அவர்களும் சில மூத்த போராளிகளின் வருகையும் வந்தாறுமூலை கிராமத்தை அண்டிய வயல் கிராமமான ஈரலக்குளம் என்கின்ற இடத்தில் குளத்தின் அருகாமையில் அமைந்திருந்த மருதமரச்சோலையில் மாவட்டத்தின் முதலாவது விடுதலைப் புலிகளின் பயிற்சி பாசறை இடம்பெற்றது இதனால் வந்தாறுமூலை கிராமமக்களுக்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தன.

இங்கே தளபதி அருணா திருமலை, அன்றைய மாவட்ட தாக்குதல் தளபதி லெப்.கேணல் குமரப்பா வல்வெட்டித்துறை, அம்பாறை மாவட்ட தளபதி மேஜர். டேவிட் பொத்துவில், மூத்த போராளியான நியுட்டன் நெல்லியடி, பிரிக்கேடியர் சொர்ணம் திருகோணமலை, மேஜர். கமல் வல்வெட்டித்துறை,பல்கலைக்கழக பொறியல் பீட மாணவனாக இருந்து பின்பு தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பயிற்சி பாசறைப் பொறுப்பாளர் கப்டன் முத்துசாமி காளுவாஞ்சிக்குடி, கப்டன் ஜிம்கலி கிரான் , கப்டன்  கரன் கல்லடி,லெப் கஜன் புளியந்தீவு, லெப்.யோசெப் பொத்துவில்,லெப்.பயஸ் புதூர், லெப். ஈசன் வந்தாறுமூலை,  லெப்.ஜோன்சன்(ஜுனைடின்) ஓட்டமாவடி ,லெப். ரவிக்குமார் கல்லடி,லெப்.உமாராம் கல்லடி, லெப். புவிராஜ் கல்லடி, லெப்.அரசன் இருதயபுரம், லெப்.கலா தாண்டவன்வெளி, 2 லெப்.சகாதேவன் மகிழடித்தீவு, 2ம்லெப்.லலித் முல்லைத்தீவு.போன்றவர்களும் தங்கி இருந்தனர்.

பயிற்சி பாசறை முடிவுற்ற நிலையில் தளபதி அருணாவின் திட்டமிடலில் மாவட்டத்தின் இரண்டாவது சிங்களகாவல் நிலையத்தின் மீதானதாக்குதல் 2 .09 .1985 அன்று ஏறாவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது தமிழ் மக்களின் மனப்பூர்வமானஆதரவு விடுதலைப் புலிகளுக்கு இருந்ததென்பது தாக்குதலின் பின்பு வந்தாறுமூலைக் கிராமத்தை நோக்கி வந்த போராளிகளை மிகவும் மகிழ்ச்சிகரமாக மக்கள் வரவேற்றதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த வரவேற்பு நிகழ்வில் திட்டமிடாதவகையில் ஒன்று கூடிய திரளான மக்கள் மத்தியில் கோவிந்த ஐயா,சிங்கோ மாஸ்டர் போன்றவர்களும் முதன்மை இடம்பெற்றிருந்தனர். இதன்மூலம் வந்தாறுமூலை கிராமமக்களும் விடுதலைப் புலிகள் போராளிகளும் இரண்டறக் கலந்திருந்தனர் என்பதை திடமாக கூற முடிகிறது. கோவிந்தசாமி ஐயாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு அன்றிலிருந்தே ஆரம்பமானதென்பதை எம்மால் இன்று குறிப்பிட முடிகிறது.

இவருடைய அரசியல் வழி எப்போதும் தெளிவான நிலையிலிருந்தன. தந்தை செல்வாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சிக்கு தனது முழு ஆதரவை வழங்கியதோடு அக்கட்சியின் அரசியல் மேடைகளில் தமிழ்மக்களின் விடுதலைக்காக வீர முழக்கமிட்ட விடுதலை வீரர்தான் இந்த கோவிந்தசாமி ஐயா.

கோவிந்தசாமி ஐயாவை நாம் அறிமுகமாகியது விடுதலையை நேசித்த ஒருவராகத்தான் அதுமட்டுமன்றி அவருடைய வாழ்க்கையில் பெரும்பகுதி தமிழ்மக்களின் விடுதலையோடு கலந்துவிட்ட ஒன்றாகத்தான் இருந்துவந்ததையும் நாம் கண்டிருக்கின்றோம்.

1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தனித் தமிழ் ஈழத்திற்கான தீர்மானமும், அதனைத் தொடர்ந்து 1977 ம் ஆண்டு நடந்த தேர்தலும்இ தமிழ்மக்களின் விடுதலை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். தமிழ்மக்களின் முற்றுமுழுதான ஆணை தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் கட்சிக்கு கிடைத்தது. அதற்கு பிறகு தமிழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆயுதப்போராட்ட வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக மாற்றியது.

தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் மேடைகளில் உரிமை முழக்கமிட்ட கோவிந்தஐயா வாழைச்சேனை காகித ஆலையில் தொழில் புரிந்த ஒருவராக இருந்ததனால் 1977 தேர்தலுக்கு பின்பு அரசியல் பழிவாங்கலில் எம்பிலிப்பிட்டிய என்ற சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த காகித ஆலைக்கு இடமாற்றப்பட்டார். அங்கே செல்லவிரும்பாது தொழில் இழந்த நிலையில் எவ்வளவு துன்பங்கள் தன்னைத் துரத்தியபோதும் தமிழ்மக்களின் விடுதலையே தனது குறிக்கோள் என்பதிலிருந்து அணுவளவும் அசையாது மாறாக இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்கி வந்தார்.

1988ம் ஆண்டு காலப்பகுதியில் எமது மண்ணில் இந்திய படையினர் நிலை கொண்டிருந்த வேளையில் அவர்களுடன் இணைந்து ஒட்டுக்குழுக்களும் இயங்கிபோது மக்கள் நலன் கருதி செங்கலடி வட்டத்தில் லீனா மாஸ்டர் தலைமையில் அமையப்பெற்ற மக்கள் குழுவில் சிறப்பான பணியை மேற் கொண்டிருந்தார் .

1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தோற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் மக்கள் முன்ணணி அரசியல் கட்டமைப்பொன்றின் மூலம்தேசியவிடுதலை அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார். வந்தாறுமூலை சிற்றூர் அவையின் தலைவராகவும் செங்கலடி வட்டவையின் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டு தனது விடுதலைப்பணியை முழு நேரமாக ஆரம்பித்தார்.

எவ்வித கொள்கைப்பிடிப்பும், பற்றும் இல்லாதவர்கள் தங்களை விடுதலை வீரர்களாக இனம் காட்டி புலம்பெயர் தேசங்களில் சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பைச்சேர்ந்த சிலருடன் ஒப்பிடுகையில் தான்பிறந்த மண்ணில் தமது மக்களோடு நின்று தன்னையே அர்ப்பணித்த கோவிந்தசாமிஐயா மிகவும் உயர்ந்த இடத்தில்வைத்து தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தடம் பதித்தவர்கள் தாய்மொழியையும் தமிழீழ மண்ணையும் நேசித்ததனால் அம்மக்களோடு நின்று தங்களையே அர்ப்பணித்தார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியலில் பெரும் பங்கை அவ்வமைப்பு வகித்ததினால் அதன் ஊடாக அரசியலில் இடம் பிடிப்பதற்கு 2004ம்ஆண்டு அரசியலில் நுழைந்தவர்கள் மத்தியில் சுயநலமற்ற முற்றுமுழுதாக வாழ்க்கையை தன் இனத்தின் விடுதலைக்கு அர்ப்பணித்த கோவிந்தசாமி ஐயாவைப் போன்றவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்து மக்களால் மதிக்கப்படுகின்றார்கள். இவ்வறானவர்களைப் பார்த்தாவது புலம் பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழ்மக்கள் விடுதலை வீரர்களை இனம்காண வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.

1990 ஆண்டு தமிழ் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக மீட்டெடுப்பதற்கு ஆயுதப் போராட்டமே சிறந்த வழி என்பதால் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமானது. அதன்போது மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.அப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகள் மக்கள் எழுச்சி கொள்ளும் வகையில் மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் மேற்கொள்ளபட்டன.அக்காலகட்டத்தில் கோவிந்தசாமி ஐயா அவர்கள் அரசியல் பிரிவினருடன் இணைந்து பல்வேறு வழிகளில் பணியாற்றினார். ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனைத் தொடந்து விடுதலைப் புலிகள் அமைப்பில்தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டார்.

மக்களுகாக அமைக்கப்பட்ட இணக்கமன்றத்தில் பொறுப்பாளராக இருந்து சேவை புரிந்தார் . இவ்வாறு காடுகளில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு வாழ்ந்ததனால் அவர்களின் துயரத்தையும் நன்கு அறிந்து அவர்களோடு சேர்ந்து செயல்பட்டார். கண்பார்வை குறைந்த அவருக்கு வெளிச்சம் இன்றி காடுகளில் நடமாடுவது கடினமாக இருந்தது ஆனால் அதையும் தாங்கிக்கொண்டார்.

இவருடைய காலத்தில் தமிழீழ விடுதலையை உச்சமாக நேசித்து சிங்கள படையினரின் தடுப்பு முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை அடைந்த பின்பும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கியவரும் பின்நாளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிமலன் சௌ ந்திரநாயகம் அவர்களையும் இச்சந்தப்பத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

ஏனெனில் வந்தாறுமூலைக்கு அருகாமையில் உள்ள மயிலவெட்டுவான் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் நிருவாக அமைப்புக்கள் செயல்பட்டன. இதில் கோவிந்தசாமி ஐயா இணக்க மன்ற நிருவாகத்தையும்,மருத்துவர் நடராஜன் மருத்துவ சேவையையும், நிமலன் சௌ ந்திரநாயகம் தொண்டு நிறுவனங்களின் உதவியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் இணைப்பாளராக செயல்பட்டதையும் மக்களால் மறக்க முடியாத நிகழ்வாகும். இன்று மூவரும் உயிரோடு இல்லாவிட்டாலும் இறுதிவரை தாய் மண்ணில் நின்று தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்தார்கள் என்ற வரிசையில் உள்ளடக்கப் படுகின்றார்கள்.

1993ஆம் ஆண்டு மட்டக்களப்பு காடுகளில் எமது தேசிய விடுதலை இயக்கத்துக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் தாக்குதல்கள் பரவலாக, தொடராக நடத்தப்பட்டதால் போராளிகளும், அப்பகுதியில் வாழும் மக்களும் பெரும் துன்பப்பட்டனர். உணவைப் பெறுவதற்கே சிரமமான காலமாக குறிப்பிட முடியும். இக் காலகட்டத்திலும் போராளிகளுடன் இணைந்து கோவிந்தஐயாவும் ஒருவராக இருந்தார்.ஒருகட்டத்தில் மாட்டுப்பட்டிகளின் நடுவே மாடுமேய்ப்பவர்களுடன் அவர்களுகேற்ற உடையுடன் மாறு வேடத்தில் அலைந்து திரிந்ததையும் எம்மால் எண்ணிப்பார்க்கமுடிகின்றது. எமது இன விடுதலைக்காக தங்களுடைய பாச உணர்வுகளையும், ஆசைகளையும் துறந்து தங்களை அர்ப்பணித்ததை தமிழ் மக்கள் என்றுமே மறக்கக்கூடாது.

தேசியத் தலைவரின் ஆணையின்படி மட்டக்களப்பிலிருந்து போராளிகள் அழைக்கப்பட்டபோது கோவிந்தஐயாவை போராளிகளுடன் அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அவரின் பார்வைக்குறைவு இருட்டில் அவரால் நடமாட முடியுமா என்ற கேள்வி இருந்தபோதும் நீங்கள் எப்படியோ போய்சேர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். தென்தமிழிழத்திலிருந்து வட தமிழீழத்துக்கு நடந்து செல்வதென்பது சுலபமான விடயம் இல்லை.

அதுவும் கோவிந்தசாமிஐயா போன்றவர்களுக்கு மிகவும் கடினமான பயணமாகும். ஆனாலும் இளம் போராளிகளின் உதவியோடு வட தமிழீழம் சென்றடைந்தார்.

தளபதி பானு அவர்களால் தமிழீழ  நீதி  நிருவாகத்துறைக்கு அனுப்பப்பட்டு அங்கு நடுவப்பணியகப்பொறுப்பாளராக செயல்பட்டார் . அங்கே கணபதிப்பிள்ளை ஐயா என்றும், பின்நாளில் தேனாடான் என்றும் அழைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் கடந்து வந்தநடைப்பயணத்தை விபரிக்கும் போது இளம் போராளிகளின் உதவியை என்னால் மறக்க முடியாது என்று கூறுகின்றபோதும் கொம்மாதுறை  ஊரைச் சேர்ந்த மாவீரர் மேஜர் வேந்தன் என்பவரைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்து கதைப்பார்.

மண்ணை நேசித்தால், மக்களை நேசித்தால் என்றும் மண்ணைவிட்டு, மக்களைவிட்டு, செல்வதற்கு மனம் வரமாட்டாது என்பதை கோவிந்தசாமிஐயாவை போன்றவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதொன்றாகும். ஏனென்றால் போரில் இறுதிக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலை அண்டிய கடற்கரை ஊர்களில் மக்களோடு மக்களாக நடமாடிய வேளையில் எந்த சந்தர்ப்பத்திலும் நான் சிங்களப் படையிடம் சரண் அடைய மாட்டேன். இந்த மண்ணில் என்னை விதைத்துக்கொள்வேன் என்று அழுத்தமாக கூறி இருந்தார் .     

எமது தேசியத்தலைவரை ஆழமாக நேசித்தவர் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். பின்நாளில் அது சாத்தியமாகி அவருக்கருகில் நின்று புகைப்படம் எடுக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அளவுக்கதிகமான மகிழ்ச்சி அடைந்தார். இதனை வாழ் நாளில் மறக்கமுடியாத நாள் என்றும் கூறிக் கொண்டார்.

கோவிந்தஐயா தாய்மொழியையும் தமிழீழ மண்ணையும் நேசித்ததனால் இவ்வுலகில் தமிழினம் வாழும் வரை அழியாத நினைவாக இருக்கப்போகின்ற முள்ளிவாய்க்காலில் தனது இறுதி மூச்சை நிறுத்தி உறங்குகின்றார்.

இவருடைய வீரச்சாவு எமக்கு காலம்பிந்தி அறியமுடிந்தது. எமது தேசிய விடுதலை இயக்கத்தினால் வெளிப்படுத்தப் படாதகாலப்பகுதியில் இவருடைய வீரச்சாவு நிகழ்ந்ததால். இவருடைய உறவுகள் மூலம் தெரிந்துகொண்டோம்.

2009ம் ஆண்டு  மே 5 திகதி அன்று தன்னால் வெட்டப்பட்ட பதுங்கு குழியில் இருந்த வேளையில் குழந்தைகளுடன் அவ்விடம் வந்த ஒரு குடும்பத்திற்கு அந்த பதுங்கு குழியை தங்குவதற்கு கொடுத்து விட்டு பதுங்கு குழிக்கு வெளியில் மணல் தரையில் அமர்ந்து இருந்த வேளையில் சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் தன் உதிரத்தை அந்த மண்ணிலேகலந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

1941 ம் ஆண்டு தமிழீழ மண்ணில் பிறந்த கோவிந்தசாமி ஐயா 1961 ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு மே மாதம்5 திகதி வரை தாம் பிறந்த தமிழ் இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து பணி செய்த கோவிந்தசாமிஐயாவின் நினைவுகள் எமது உயிர் இருக்கும் வரை என்றும் உறங்காது. எம் மண்ணை விட்டு அவர் புகழ் என்றும் அழியாது.

தமிழ்காந்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post