காலம் எமக்கிட்டகட்டளை

வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்து அடுத்த சந்ததியிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு எமது மண்ணோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு உள்ளது. இது காலம் எமக்கிட்டகட்டளை . இதனை நிறைவேற்றத் தவறினால் வரலாற்றைத்  தமது விருப்பத்துக்கேற்ற வகையில் பதிவு செய்து விடத்  துடிக்கும் சக்திகளுக்கு வழி  விட்டுக் கொடுத்தது போலாகும்.

நெருக்கடி மிகுந்த காலங்களில் போராளிகள் செயற்பட்ட விதம், கண நேரத்துக்குள் முடிவெடுத்துச் செயலாற்றிய அவர்களது ஆளுமை, இதற்கெல்லாம் பக்கபலமாக இருந்த மாமனிதர்களாகவோ, நாட்டுப்பற்றாளர்களாகவோ அறிவிக்கப்பட வேண்டிய பலரது பங்களிப்பும் வெளியே தெரியாமல் போயிற்று. இந்த நிலைமையை மாற்ற வரலாறு தெரிந்த,கூடிப்பழகிய அனைவரும் பங்களிக்க வேண்டும்.

இந்த வகையில் நிலா  தமிழின்  பங்களிப்பு காத்திரமானது. முடிந்தவரை அவர் காலம் இட்ட  பணியைச் சரியாகச்   செய்துள்ளார் அவர்  எம் முன் வைக்கும் வரலாற்றுப் பக்கங்களைப்  புரட்டத்  தொடங்குவோம்.

***

                                            முன்னுரை

உலகிலே மாந்தகுலத்தின் மேம்பாட்டிற்கு எதிரான ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் சார்பு மற்றும் தொங்கு சதை நாடுகளின் ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்து வீரமிகு போராட்டங்கள் குமுறி வெடித்துள்ளன. அவ்வாறே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தையும் புரட்சிகரமாற்றங்களையும் ஏற்படுத்திய பெருமை எமது புரட்சிகர இயக்கத்தையே சாரும். நாம் மக்களுக்காகவே ஆயுதம் ஏந்தினோம். மக்களின் விடிவுக்காகவே மறவழிப் போராட்டப் பாதையைத் தழுவினோம். தேச ஒடுக்குமுறைக்குள்ளாகி அல்லற்பட்டு அவல வாழ்க்கை வாழ்ந்த எம்மக்களினை அடிமைத் தளைகளைத் தகர்த்து விடுதலைபெற்றவர்களாக்க வேண்டுமென்ற எமது சமூக வாஞ்சையே எம்மை ஆயுதம் ஏந்த வைத்தது. நாம் ஏந்திய ஆயுதங்கள் அறத்தின் கேடயங்கள், விடுதலை வேட்கையின் ஒளிக்கற்றைகள். 

சிங்கள பௌத்த பேரினவாதமும் உலக வல்லாண்மையாளர்களும் சேர்ந்து ஆடிய நரபலி வெறியாட்டத்தால், முப்பத்துமூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த எமது மறவழிப் போராட்டமானது 2009.05.19 அன்று தேக்கநிலைக்கு வந்தது. வீரஞ்செறிந்த எமது விடுதலைப் போராட்டத்திற்காக அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட  மாவீரர்களையும் ஒன்றரை இலட்சம் பொதுமக்களையும்  எமது தமிழீழ மண்ணில் விதையாய் விதைத்துள்ளோம். ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் பொது மக்கள் பலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இறுதிநேரப் போர்க்களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட எத்தனையோ மாவீரர்களின் வீரச்சாவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாதனவாக உள்ளன. இவர்களின் இவ்வாறான அளப்பரிய ஈகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் ஆவணப்படுத்தி வரலாறாகப் பதிவு செய்யப்பட வேண்டியது எஞ்சியுள்ள எம்மவர்களின் தலையாய கடமை ஆகும்.

அந்த வகையில் என்னுடன் நிதித்துறைப் போராளிகளாக இருந்து வெளி நிருவாகப்பணி புரிந்தும் களப்பணி புரிந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பங்களித்து வீரகாவியங்களாகி விட்ட சில மாவீரர்களுடனான என்னுடைய அனுபவப் பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனநிறைவு அடைகின்றேன்.

நிதித்துறை மாவீரர்களைப் பொறுத்த வரையில் போராட்ட வாழ்க்கையில் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர்கள். மக்களுடனான பணிகளிலும் சரி களத்திற்கான பணிகளிலும் சரி தங்களது தனிப்பாங்கான பங்களிப்பினை திறம்பட மேற்கொண்டவர்கள். வெளி நிருவாகப் பணிகளில் மக்களோடு மக்களாக பணிபுரிந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென போர் முன்னரங்குகளில் களப்பணிகளுக்கு ஆளணிப் பற்றாக்குறையின் காரணத்தினால் களப்பணி புரியவருமாறு பணிப்பு வரும். இதன்போது நிருவாகப் பணிகளை இடை நிறுத்திவிட்டு போர் முன்னரங்குகளுக்கு சென்று களமாடி வீரச்சாவடைந்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்கள் திரும்பி வந்து குறையில் விட்ட பணிகளை மீள ஒழுங்குபடுத்தி வீரச்சாவடைந்தவர்களின் பணிகளையும் சேர்த்து அதிக வேலைப்பளுவுடன் கூடிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படும். இவ்வாறு வேறுபட்ட சூழ்நிலைகளில் பல்வேறுபட்ட சிக்கல்களைச்  சந்தித்து நாட்டுக்காக தம்மையே அர்பணித்த இவ் ஈகச் செம்மல்களை  நினைவுகூர்ந்து அவர்களினது வாழ்கையினை வரலாறாக்கி உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டியது எமது வரலாற்றுக் கடமை ஆகும்.

நிதித்துறையில் இருந்து மாவீரர்களான பத்து மாவீரர்களின் நினைவுத் தொகுப்பை தொகுத்து "என் நினைவில் மாவீரர்கள்; நினைவழியா நாட்கள்" எனும் நூலில் தொகுத்து வழங்கியுள்ளேன். இவர்களில் முள்ளிவாய்க்காலில் இறுதி நேரப் போர்க்களத்தில் வீரச்சாவடைந்தவர்களான நிதித்துறையில் மூத்த உறுப்பினராக இருந்த மாவீரர் நிசாம்/சேரன் மற்றும் மாவீரர் பூம்பாவை போன்றவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட இராணுவத் தரநிலை வெளிப்படுத்தப்படக் கூடிய சூழ்நிலை அமைய முடியாமல் போய்விட்டது. அத்துடன், முற்காலப் பகுதிகளில் ராதா வான்காப்பு படையணியிலும் பிற்காலப் பகுதிகளில் நிதித்துறையிலும் போராளியாக இருந்து மாவீரரான எனது வாழ்விணையர் லெப்.கேணல் அன்பழகன்/விமலனினதும் மற்றும் அரசியல்துறைப் போராளியாக இருந்து வெளி நிருவாகப்பணி, களப்பணி புரிந்து முள்ளிவாய்க்காலில் இறுதிநேரப் போர்க்களத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டவரும் எனக்குத்  தம்பி முறையுமான மாவீரர் கப்டன் கரிகாலனினதும் நினைவுக் குறிப்புகளையும் இந்நூலின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந் நினைவுத் தொகுப்பை எழுதி நூலுருப் பெறும் வகையில் தகவல்கள் தந்து அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்த நண்பர்களுக்கும், குறிப்பாக மேஜர் திலகா/வான்மதி மற்றும் கப்டன் கலைமதி ஆகிய மாவீரர்களின் நினைவுக்குறிப்புகளினை எழுதித் தந்த விண்ணிலா அக்காவிற்கும், லெப்.கேணல் அன்பழகன் தொடர்பாக பகிரக்கூடியளவிலான தகவல்களைத் தந்துதவிய ராதா வான்காப்புப் படையணியைச் சேர்ந்த போராளி நண்பர்களுக்கும் மற்றும் குறைகளைச் சுட்டியும் நிறைகளை மெச்சியும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்துப் போராளி உறவுகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது விடுதலை இயக்கத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராகவிருந்து தமிழீழ நிழலரச நிருவாகங்களின் நேர்த்தியான இயங்குதிறனுக்குப் பெரும்பங்களித்துத்  தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின்  கனவை நனவாக்கியவரும், தனது ஒவ்வொரு மூச்சிலும் தனித்தமிழைத் தாங்கி எமது தமிழீழ மண்ணைத்  தனித்தமிழால் எழிலுறச் செய்து வீரச்சாவைத் தழுவிய மாவீரர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவிற்கு இந்த நூலினை காணிக்கை செய்கின்றேன். எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரின் வரலாற்றுப் பங்களிப்பைப் பற்றி தனி நூல் எழுத வேண்டிய தேவை உண்டு. அதற்குரிய மிகச் சரியான தகவல்கள் முழுமையாக் கிடைக்கப் பெறாமையினால் அவரின் நினைவுகளைச் சுமந்த பிள்ளையாக நானெழுதிய சிறிய கவிதையொன்றை இந்நூலில் இணைத்துள்ளேன்.                                                                                தமிழேந்தியப்பா

                                                     அன்பினிலே கனிந்தவரே

பண்பினிலே முதிர்ந்தவரே

பல்துறையும் கற்றவரே

செல்வச்சீர் பெற்றிருந்தும்

மலர்ப்படுக்கை வாழ்விருந்தும்

தன்நலம் கருதாமல்

இனமானம் பெரிதென்று

தனையீந்து போராடி

தமிழின விடுதலைக்கு

உரம் சேர்க்க வந்தவரே!!!

 

இனியேனும் எமக்கு

விடிவேதும் கிடைக்கும் என்று

எம் தலைவன் கைகோர்த்து

பனியென்றும் குளிரென்றும்

மழையென்றும் வெயிலென்றும் பாராமல்

தெருத்தெருவாய் ஊரூராய்

திரிந்து நிதி திரட்டி

எம்படை வளர்த்தவரே!!!

 

மொழியெனப்படுவது விழியெனக் கருதி

பழியெனப் பிறமொழி கலப்பது துறந்து

மொழி நலமும் இன நலமும் கொண்டு

அன்னைத் தமிழுக்கே அடி பணிந்து

தன்னைத் தமிழுக்கே தந்து தமிழ் காத்து

எம் தலைவன் மதிப்பினிலே மூத்தவராய்

அறப்போர் புரிந்து சிறப்பாந் தமிழில்

மறப்போர் புரிந்தவரே!!!

 

எம் ஈழ தேசத்தின் முதுகெலும்பாய்

நிதித்துறையின் ஆலமரமாய் இருந்தவரே

பிள்ளைகளாய் எங்களைப் பார்த்தவரே

உங்கள் பிரிவினிலால் எங்களை வதைத்தவரே

எம் நெஞ்சினிலும் நினைவினிலும்

தமிழேந்தி அப்பாவே நீங்கள் தான்

நெட்டுயிர்க்கின்ற எம் மூச்சினிலும் நீங்கள் தான்

உங்கள் பெயர் சொல்லி தடம் பதித்து

விழுதுகள் நாம்

தேசத்தின் பணி தொடர்வோம்!!!

 

-நிலாதமிழ்.

தொடர்புக்கு: 

niththiyananthan92@gmail.com



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post