தமிழருக்கு தக்காளிச் சட்னி சிங்களவருக்கு இரத்தம்!

தமிழருக்கு தக்காளிச் சட்னி

சிங்களவருக்கு இரத்தம்!

- அவதானி

இந் நாட்டின் சகல சட்டங்களுமே முடிந்த வரை தமிழருக்கு எதிரான உணர்வோடு தான் கையாளப்படுகின்றன என்று எண்ணினால் தவறல்ல. தொல்பொருள்வனஜீவராசிகள் திணைக்களங்கள், கொரோனா நடவடிக்கை என எதை நோக்கினாலும் தமிழர் விரோதம் பளிச்செனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு மே-18 நாள் நிகழ்வை தடைசெய்யக் கோரும் மனுவை பொலிஸார் முல்லை நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இதற்கு முந்திய வருடங்களிலும் பொலிஸார் இவ்வாறு முயன்ற போதும் கொரோனா காப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளிகளைப் பின்பற்றி இந்நாளை அனுஷ்டிக்கலாம் என நீதிமன்று தெரிவித்ததும். நீதிமன்று தடைவிதிக்கமாட்டாது என உறுதியாகத் தெரிந்ததும் நீதவானின் உத்தரவு வரை காத்திருந்த பின்னர் பொலிஸ் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது.

கொரோனாவையே காரணம் காட்டி சில பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் இத்தடையை விதித்தனர். எதிர்பார்த்தவாறு நிகழ்வை இடை நிறுத்தியாயிற்று என பொலிஸார் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பிள்ளையார் பிடிக்கப் போக குரங்காக மாறிய கதையாக நிலைமை உருவாயிற்று. கொரோனா பரவல் என்பதால் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர் போகவில்லை. இந்தத் தொழிற்சாலைகளை நடத்துவது பெரும்பான்மையினரே. அவர்கள் நட்டமடையலாமா? எனவே வீடுவீடாகச் சென்று வேலைக்குச் செல்லாத தொழிலாளரை மிரட்டி அங்கு செல்ல வைத்தனர். பொலிஸ் ஊரடங்கு போட்டவர்களுக்கும் பணிக்குச் செல்லுமாறு மிரட்டிய படையினருக்கும் தாங்கள் காட்டியது கொரோனாவின் பேரிலான பூச்சாண்டி என்பது நன்றாகவே தெரிந்திருந்தது பொலிஸாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழ்க்கட்சிகளைத் தவிர வேறெதுவும் முணுமுணுக்கத்தானும் முயலவில்லை. முல்லை நீதாவானை அவர்கள் மதிக்காதது தொடர் கதையாகத் தான் இருந்தது. குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய பிக்குகளும் படையினரும் முயற்சித்தனர். புதிதாக எந்தக்கட்டுமானப்  பணிகளும் நடைபெறக் கூடாது  என்ற நீதிமன்ற உத்தரவை ஓரு தமிழனின் கருத்தாகத் தான் படையினரும் பிக்குகளும் முடிவெடுத்தனர். எப்படியோ தமிழர் தரப்பின் எதிர்ப்பினையடுத்து தமது செயற்பாட்டை ஓத்தி வைத்தனர். நீதிமன்றை அவமதித்தமை தொடர்பாக படை மற்றும் பிக்குகள் தரப்பினர் மீது வழக்குத்தொடர பொலிஸார் முயற்சித்தாக தெரியவில்லை. பரிமாறுபவர் தனது ஆளாக இருந்தால் அடிப்பந்தி என்ன நுனிப்பந்தி என்ன?

     கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மிருசுவிலில் சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரை ஓவ்வொருவராக ரசித்து ரசித்து கொலை செய்த சுனில் ரத்னாயக்க என்ற படை அதிகாரியை விடுதலை செய்வேன் என வாக்குறுதி வழங்கினார் கோத்தபாய. சகல நீதிமன்றங்களும் இவருக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்திய பின்னரும் இவரை விடுதலை செய்வேன் என்ற கோத்தபாயாவுக்கு 6,924,255 லட்சம் பேர் வாக்களித்தனர். இதில் இன்று கோட்டா கோ கோம் போராட்டத்தை முன்னெடுப்பவர்களும் அடக்கம். இவர்கள் இதே காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் வெற்றியை கிரிபத் (பால்சோறு) வழங்கிக் கொண்டாடியவர்கள் என்பதனையும் மறப்பதற்கில்லை.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது இனப்படுகொலையே இதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்த வடக்கு முதல்வர் மீது சீற்றம் கொண்ட சுமந்திரன் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேணையைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார் என உணர முடிகிறது. யு.எஸ் ஹோட்டலில் விந்தன் கனகரட்னம் - ஆர்னோல்ட் சந்திப்பின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் குறித்து வெளிவந்த செய்திகள் இதற்கு சான்று. அந்தக் காலத்தில் உள்ளூர் பொறிமுறையே போதும் என்பதே சுமந்திரனின்  கருத்தாக இருந்தது.

அரசியல் கைதிகள் மத்தியில் "நான் கோட்டாவுடன் டின்னர் சாப்பிடுவதுண்டு" என்று பெருமையாகப் பேசிக் கொண்ட சுமந்திரன் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டவிரோதம் என்று சொல்கிறார். முள்ளிவாய்க்கால் விடயத்தில் இந்த சட்ட அறிவை பிரயோகித்திருந்தால் இன்னொரு தடவை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வருமா?

   இன்று ஜே. வி. பினருக்கு ஓரு நீதி;  புலிகளுக்கு ஓரு நீதி. சிறையிலிருந்த ஜே.வி.பினர் பொதுமன்னிப்பு என்ற அறிவிப்புக் கூட விடுக்கப்படாமல் விடுதலையாகினர். எத்தனை தடவை கோத்தாவுடன் சுமந்திரன் டின்னர் சாப்பிட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் அப்படியே தான் உள்ளனர். விடுதலையான சிலரும் தமது முயற்சியின் பயனாகவே வெளி வந்தனர். சம்பந்தன் ஜயா "திறப்பு என்னிடம் இல்லை" என்று கைவிரித்ததும் பிரசித்தம்.

  ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால படையினரை  நீதிமன்றில் நிறுத்தமாட்டேன் என கூறியதும் மறக்கக் கூடியது அல்ல. இன்று எரிபொருள் நிலையத்தில் ஓரு சிங்களப் பொதுமகனை உதைத்தற்காக லெப் கேணல் நிலை அதிகாரி இடை நிறுத்தப்பட்டுள்ளார். விசுவமடுவில் படையினரால் துவம்சம் செய்யப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்குமென எதிர் பார்ப்பது  மடமைத்தனம். எட்டுப்பேரைக் கொன்றவனுக்கு பொது மன்னிப்பு வழங்குகையில் இதெல்லாம் அற்ப விடயங்களாகவே கருதுவர்.

 மகிந்தவுக்கு எதிரான தமிழ் பேசும் மக்களின் வாக்குகளே (வடக்கு,கிழக்கு,மலையகம்,முஸ்ஸீம்கள்) அன்று மைத்திரியை ஜனாதிபதியாக்க உதவின தேர்தல் முடிந்ததும் நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலைக் குறிப்பிட்டார் மைத்திரி. அதில் சம்பந்தன் உட்பட எந்தத் தமிழ் தலைவரின் பெயரும் இடம்பெறவில்லை. இது பற்றிக் குறிப்பிட்ட மனோகனேசன் "இது அவர்களின் பரவணிப்புத்தி" என்றார். இந்த மைத்திரி போன்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாகவே சம்பந்தன், சுமந்திரனின் செயற்பாடுகள் உள்ளன.

முதல்வர் நிதியத்தை  உருவாக்க அனுமதி கோரினார் அப்போதைய வடக்கு முதல்வர். எப்படியிருந்தாலும் இந்த நிதியத்திற்கு அரச வங்கிகள் ஊடாகவே நாட்டுக்குள் நிதி வரும். டொலரோ, ஸ்ரேலிங் பவுனோ, யுரோவோ, சுவிஸ் பிராங்  நாட்டுக்குள் வந்திருக்கும். தமிழர்கள் நிர்வாகம் செய்யத்  தகுதியற்றவர்கள் என நிறுவ சுமந்திரன் முயற்சித்தது போலவே அப்போதைய ஜனாதிபதியும்  தீர்மானித்தார். அந்த நிதியம் செயற்படத்  தொடங்கியிருந்தால் கணிசமான நிதி நாட்டுக்குள் வந்திருக்கும். இன்று தமிழர்கள் உதவ வேண்டுமென கூப்பாடு போடும் தேவை இல்லாமல் போயிருக்கும். எனினும் அவர்களுக்கு தமிழர்கள் என்றும் சந்தேகப்பிரஜைகளே.

மைத்திரியின் காலத்தில் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கிறோம் என்று கூறி கட்சிக்குள் எந்த முணுமுணுப்பையும் எழமால் பார்த்துக் கொண்டோர் அந்த ஆட்சிக்காலத்தில் ஏக்கிய ராஜ்ய - ஒருமித்த நாடு என்ற சர்ச்சையை உருவாக்கி மக்களின் கவனத்தை திசை திருப்பியது தான் மிச்சம். இந்தக் காலத்தில் ரணிலுக்கு வரும் பிரச்சனையை அவரே பார்த்துக் கொள்வது தானே? கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் என்றால் ரணில் அல்லது அவரது அமைச்சர்கள் யாரவது வாக்குறுதி வழங்குவதுதானே? தேவையில்லாமல் அதற்குள் மூக்கை நுழைத்து சுமந்திரன் வாக்குறுதி வழங்கியதால் கடந்த தேர்தலில் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்தது தான் உச்சக்கட்ட முட்டாள்த்தனம். இன்றுள்ள நிலையில் தமிழர் நிலப்பறிப்பு விடயத்தில்  முல்லைக் கடற்படையினர் தொல்பொருட் தினைக்களம்கிழக்கு மகாண ஆளூநர், பிக்குகள் என சகல தரப்பினரும் கூட்டாக கைகோர்த்துள்ளனர். இந்த விடயங்களிலும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரங்களிலும் முழுமையான கவனம் செலுத்துவதே தேவை. எப்போதுமே நன்றி மறந்த மைத்திரி போன்றோரின் தேவைகளுக்காக தமிழரை அலைக்கழிக்காமல் இருப்பது தமிழர் தலைமைக்கு நல்லது. தேவை முடிந்ததும் எட்டி உதைப்பது சிங்களத்தின் வரலாறு. வடிவேலுவின் பாணியில் சொன்னால் எனக்கு  வந்தால் தக்காளி சட்னி உனக்கு  வந்தால் இரத்தம் என்ற பாணியில் காலி முகத்திடல் போராட்ட ஏற்பாட்டுக்காரர்கள் நடந்து கொள்வர் என்பதை மறக்கக் கூடாது.

***

 பின்னிணைப்பு முகநூல் பதிவு இது  (வரதன் கிருஸ்ணா)

 

ஒரு துண்டு நிலமே இல்லாதவர்கள் எப்படி முட்டுக்கொடுப்பது ?

இலங்கைக்கு   சுதந்திரம் கிடைத்தபின்னர் முதலாவது நாடாளுமன்றம்  டி எஸ் சேனாநாயக்க தலைமையில்   அமைக்கப்பட்டபோது   அவரின்  அரசை நிறுவ  முட்டுக்கொடுத்த மூன்று தமிழர்கள். கணபதி காங்கேசன் (ஜிஜி) பொன்னம்பலம்.  தொழிற்துறை அமைச்சர்.  செல்லப்பா ( அடங்கத்தமிழன்)   சுந்தரலிங்கம்.  தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர்..கதிரவேலு  சிற்றம்பலம். தொலைத்தொடர்பு மற்றும் தபால் அமைச்சர்  இவர்கள் அணிவகுத்த அந்த நாடாளுமன்ற  காலத்தில்தான் இலங்கையில் இன்னொரு பிரதேசத்தில் இலங்கையின் இரண்டாவது  சனத்தொகையை கொண்ட  மலையக தமிழரின்  பிரஜாவுரிமை  பறிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்ட  காலம். அதிலிருந்து மீண்டுவர  சுமார்  ஐம்பது  வருடங்கள்  போராட வேண்டியநிலை ஏற்பட்டது.  இதை ஏன்  இப்போது  சொல்ல வருகின்றேன்  என்றால்  இலங்கை வரலாற்றில்   அதாவது தமிழர்களின் நலனில்  அக்கறைக்கொள்ளாத   பெரும்பான்மை  அரசியல்வாதிகளோடு  கைக்கோர்ப்பதால் எந்த நன்மையையும்  ஏற்படப்போவதில்லை. நாம் வாழும் பகுதிகளில் கேட்பார்ரற்று கிடக்கும் ஒருத்துண்டு நிலத்தயேனும் வழங்க  முன்வராதவர்களுக்கு  முட்டுக்கொடுப்பதால்  நமக்கு எதுவும் நடந்துவிடப்போவதில்லை. இன்றைய அரசை நிறுவ காரணகர்த்தாக்களாக  இருந்து அந்த 69 லட்ச  பெரும்பான்மை  மக்கள் இந்த அரசை அல்லது அதிகாரம் வைத்திருப்பவர்களை  அவர்களே விரட்டியடிக்கட்டும்.  சிங்களவர்களின்  வாக்குகளால் மட்டுமே  நான் ஆட்சிக்கு வந்தவன் என்று சொன்ன கோத்தபாய  அதை எதிர்க்கொள்ளட்டும்.

குறிப்பு: இந்த படம் இலங்கையின் முதலாவது அமைச்சரவை.

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post