மூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு !


மு. மனோகர் (பசீர் காக்கா)

 

ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு. அது போல் விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறுவதுண்டு. துக்கம் விசாரிப்பது போன்ற பாணியில் விபத்தாக நடந்த சந்திப்பொன்று என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த முகத்தைச் சந்தித்தேன். நான் தொண்டு செய்யும் கனகபுரம் சிவன் ஆலயத்தை நாடி ஒரு ஊடகவியலாளருடன் அவர் வந்தார். 1981ல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணமண்டபத்தில் எனக்கு உடற்பயிற்சியை வழங்கிய ராகவன் என்பவரே அவராவார்.

அவருக்கும், மு. நித்தியானந்தன், அவரது துணைவியராக இருந்த நிர்மலாவுக்கும் இயக்கத்தோடு உடன்பாடில்லாமற் போனதுக்குப் பின்னர் 29.09.2018 அன்றுதான் அவரைக்கண்டேன். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியச்சிறை, இந்திய இராணுவச்சிறை, 2009 பின்னரான சுமார் ஐந்து  வருடகால தடுப்பு வாழ்வு முதலானவற்றில் கடித மூலம் கூட இவர் எனது நிலையை அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.ஆனால் மு.நித்தியானந்தன் தேசத்தின்குரல் பாலசிங்கத்தை சந்திக்க வந்தபோது என்னுடன் உரையாடியுள்ளார்

சமாதான காலத்தில் இடம்பெற்ற கருணாவின் பிளவின் போது ஏற்பட்ட நிலை தொடர்பாக ஈழநாதம் பணிமனைக்குத் தொடர்பெடுத்து அந்தச் சோதனையான நிலைகுறித்து வருத்தம் தெரிவித்தார். நான் தடுப்பிலிருந்தபோது பலரிடம் என்னைப்பற்றி விசாரித்துள்ளார். நான் விடுதலையானதை அறிந்தவுடன் "நீங்கள் வெளியில வந்ததெண்டு கேள்விப்பட்டன். உடன எனக்கு சரியான சந்தோசம். நான் உடன நிம்மிக்கு கோல் எடுத்துச் சொன்னன்" என்று சொன்னார்.எனக்கு ஆச்சரியம். மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள  முதலாவது ஆளாக நிம்மிதான் அவருக்குத்தெரிந்திருக்கிறதே என்று.அடிமனதில்அவருக்கு அந்தக் காதல் பசுமையாக (அவருக்கு மட்டுமே) உறைந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். 23.09.1983 மட்டக்களப்புச்சிறையிலிருந்து பல்வேறு இயக்கத்தவரும் கூட்டாகத் தப்பினர். இம் முயற்சியின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. புலிகள் சார்பானோருக்கு  சிறைக்காவலரைக்  கட்டி வாயில் பிளாஸ்டர் ஓட்டும் பொறுப்பு. நிர்மலாவை மீட்கும் பொறுப்பு புளொட் மாணிக்கம்தாசனுக்கு. ஏனையோர் அனைவரும் (டக்ளஸ் உட்பட) தத்தமது பொறுப்புக்களை நிறைவேற்றினர். வெளியில் வந்த பின்னர்தான் நிர்மலாவை மீட்கவில்லைஎன்ற விடயம் நித்தியானந்தனுக்குத் தெரிந்தது.

இந்தியாவில் விடுதலைப்புலிகள் பத்திரிகையின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்ற சமயத்தில் பல முறை அவரைச் சந்திக்கமுடிந்தது  அப்போதெல்லாம் நிர்மலா பற்றி பேச்செடுத்தாலே  கண்ணீர் சொரிவார். சில நிமிடம் மௌனமாக இருப்பார். நிர்மலாவை உள்ளே விட்டு தான் வெளியே வந்துவிட்டேனேஎன்ற குற்றஉணர்வுடன் எம்முடன் உரையாடுவார். தலைவர் ஒரு சமயம் "நிர்மலா சிறையில் இருப்பது எங்களுக்கு(இயக்கத்துக்கு)  கௌரவப் பிரச்சினைஎன்று சொன்னார். இந்த இரு விடயங்களும் நினைவில் இருக்கவே ஏதோ ஒரு வழியில் நிர்மலாவின் விடுவிப்பு சாத்தியமாயிற்று. பலரது ஒத்துழைப்பும் இதற்குக் கிடைத்தது.நிர்மலா தமிழகம் சென்றார். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் மகிழ்ச்சியளிப்பன அல்ல. குறிப்பாக நட்புக்குத் துரோகம், நித்தியானந்தனின் ஆழமான காதலைப் புரியாமை போன்றவை  சங்கடப்படுத்தினாலும் யாரும் எதுவும் செய்யமுடியாத நிலை. அப்போதும் நித்தியானந்தன் மீதான எனது மதிப்புக்குறையவில்லை. மலையகத்தவரான அவர் தனக்கு ஆபத்து வரும் என்று தெரிந்திருந்தும் பல்வேறு சம்பவங்களில் போராட்டத்துக்கு உதவியுள்ளார்.தவறுதலான துப்பாக்கிச் சூட்டில்எமதுமதிப்புக்குரிய சீலன் நெஞ்சில் காயமடைந்திருந்த போது வைத்தியச் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அழைத்து வந்தவர் இவர் என்பதும் ஒரு கூடுதல் காரணம்.

*

 தொடர்ந்து விடுதலைப் போராட்ட வரலாற்றில்  பாய்ச்சல்ஒரு தனிநாட்டுக்குரிய கட்டமைப்புடன் இயக்கம்  காவல்துறை, பல்வேறு படையணிகள், கடற்படை , விமானப்படை, அனர்த்த முகாமைத்துவம் , கலைஞர்கள், எழுத்தாளர்கள், பங்களிப்பு, வானொலி , பத்திரிகை ,தொலைக்காட்சி ,திரைப்படத்துறை உள்ளடங்கலாகஇருந்த காலம் பற்றி ராகவனால் புரிந்து கொள்ள முடியாது என்பது யதார்த்தமே. ஒரு குழந்தையின் மழலையை நேரில் கேட்டால்தான் அந்த மகிழ்ச்சியை  உணர முடியும். ,குழந்தை இப்படி பேசியது என்று பெரியவர்கள் விளக்கும்போது அதன் இனிமையை உணரமுடியாது.அதைப் போலத்தான். பிரபாகரன் எதிர்ப்பு  என்ற கண்ணாடியை அணிந்திருக்கும் போது உண்மை காணாமற் போயிருக்கலாம் அவருக்கு.

சரணடைவு என்பதைப்பற்றி  2009க்கு  முன் எவரும் கற்பனைசெய்து கூடப் பார்க்கவில்லை. ஏதோ ஒரு வகையில் நடைப்பிணமாகவே நாங்கள் எல்லையைத் தாண்டினோம். ஏற்கெனவே கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருந்தோர் நீங்கள் ஏன் சைனட்  கடிக்கவில்லை என்று  கேட்டபோதெல்லாம் கூனிக்குறுகினோம். சைனட்  கடித்த ஒவ்வொருவரின் நினைவும் மற்றவர்களைப்போல என்னையும் சித்திரவதை செய்தன. எப்படியோ மூன்று உயர்நீதிமன்றங்கள் (, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு)  நான்கு வழக்குகளைச் சந்தித்தபின் விடுதலையானேன்.

நாட்டில்  நடக்கும் சில விடயங்கள் தொடர்பாக ஒரு மாவீரரின் தந்தை என்ற வகையிலும் ஒரு மகனை எறிகணைத் தாக்குதலிலும் .இழந்தவன் என்ற முறையிலும் சிலவற்றைத் தவிர்க்க முடியாமற் சொல்லவேண்டி ஏற்பட்டது. அந்த வகையில் தான் ராகவன் என்னைச் சந்திக்க முயன்றிருக்கிறார் போலுள்ளது. அன்று வழக்கம்போல துப்பரவு செய்தல், பூப்பிடுங்குதல் போன்ற பணிகளை முடித்து விட்டு பிதிர்க் கடன் செய்வதற்காக காத்திருந்தேன். புரட்டாதி மாதத்தில் நம் முன்னோர்களுக்காக மாசியம் (மாளையம் என்றும் சொல்வர் ) கொடுப்பதற்காக அதிகாலை மூன்று மணிக்கே எழும்பி பணிகளில் ஈடுபட்டிருந்தேன். பூசை தொடங்குவதற்கு கொஞ்சம் முன்னதாகவே ராகவனும் குறித்த அந்த ஊடகவியலாளரும் வந்தனர். 35 வருடங்களுக்குப்   பிந்திய சந்திப்பு என்ற வகையில் மனதில் இருந்த சந்தேகங்கள்.  

 உடனே ஏழமாட்டாதானே. பிள்ளைகளின் இழப்புப்பற்றி விசாரித்தார்.ஏனைய பிள்ளைகள் பற்றியும் கேட்டறிந்தார். அதுபோலவே  நான் அவரது பிள்ளைகள் பற்றி கேட்டேன். சொந்தப்பிள்ளைகள் இரண்டு, அதேயளவு வளர்ப்புப் பிள்ளைகளும் உள்ளன என்றார். தொடர்ந்து டெலோமோதல் பற்றி விசாரித்தார். அதைச் சிறியண்ணா தவிர்த்திருக்கலாம். பசீர் கொண்டுவரப்பட்டிருக்கிறேன் என்று அவரது உறுப்பினர்கள் மூலம் தகவல் அனுப்பினேன்.ஒன்றாகச் சாப்பிட்டு ஒரே வீட்டில் நாங்கள் வாழ்ந்ததை அவர் மறந்திருக்க மாட்டார எனக்கருதினேன்.போராட்டத்தில் புதியவர்கள் தவறிழைத்தலும் அவர் என்னைக் காப்பாற்றுவார் எனக் கருதினேன். அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார்.

(இவ்வளவுக்கும் ஆறு நாட்களுக்கு முன்னர் நடந்த எனது திருமணத்துக்கு வருகை தருமாறு அவருடைய ஒன்று விட்ட  சகோதரருடன்  இவர் இருந்த  முகாமுக்கு நான் போய் அழைப்பு விடுத்திருந்தேன்) இரவு எங்கள் இருவரின்கையையும் கண்ணையும் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து தப்பினோம். அதற்குப் பிறகு எதையும் தடுக்க முடியாதென்று சொன்னேன். "என்ன இருந்தாலும் இயக்க மோதல் .... " என  இழுத்தார்.      

 இந்தச் சந்தப்பத்தில் அந்தஆலயத்தை நடத்துபவர் வந்தார்.அவர் சில விடயங்களை கதைத்தார்.அவர் போனதும் அவரைப்பற்றிச் சொல்லவேண்டுமென நினைத்தேன்."புலிகளிடம் ஜனநாயகம் இல்லை; எதிர்த்துக் கதைக்க முடியாது" போன்ற கருத்துக்களை சொல்பவர்களுடன் இவர் கூட்டாக இருந்தவர் என்ற வகையில் இவருக்கு  இதைப்பற்றி விளக்கவேண்டுமென்பதற்காக அந்த ஆலயத்தை  நடத்துபவரைப்பற்றி விளக்கமளித்தேன். இயக்கத்தைப் பாடாய்ப் படுத்தியவர் அவர்; அவரைப்பற்றி விடுதலைப் புலிகளும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன் என்று குறிப்பிட்டேன். அந்த ஊடகவியலாளரும் நான் குறிப்பிடாத சில விடயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். இந்தத் தகவல்இவருக்கு புதிது. இவற்றை யாரும் இவரிடம் சொல்லியிருக்கமாட்டார்கள்.

இந்தச் சமயத்தில் கோயில் பூசைக்கான மணி ஒலித்தது. நான் புறப்படும் சமயத்தில் இங்கு வந்ததை எப்போதும் நினைவில் வைத்திருக்க படம் எடுக்க வேண்டும் என்றனர். நான் விரும்பவில்லை. ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் என்னுடன் படமெடுக்க முனைந்த இரு முன்னாள் போராளிகளை பின்னுக்குத்  தள்ளி விட்டு முன்னால் நின்று செல்பி எடுத்தார் முன்னாள் போராளியான அரசியல் வாதி ஒருவர்.ஒன்றரை மணித்தியாலயத்துக்குள் முகப் புத்தகத்தில் அந்தப் படத்தைப் போட்டு "காக்காண்ணை திலீபனின் நினைவிடத்துக்கு வந்தார். அவருக்கு திலீபனின் தியாகம் பற்றி  விளக்கமளிக்கப்பட்டது. புரிந்தால் சரி"  என்று அவர் பதிவிட்டிருந்தார். அதுவும் நான் தயங்கியதற்கு காரணம்.

"எப்போதுமே இதனை முகப்புத்தகத்தில் பதிய மாட்டோம்எனத் திரும்பத் திரும்ப (மூன்று முறை) தெரிவித்த பின்னரே படமெடுக்கச் சம்மதித்தேன். அப்போது கூட அற்புதமான மனிதர் நித்தியானந்தனின் நட்புக்கு இவர் என்ன செய்தார் என்பது எனக்கு உறைக்காமல்தான் போயிற்று. அவர்கள் எதிர்பார்த்த காரியம் முடிந்ததும் பயணமாகினர்.   திலீபன் நினைவிடத்தில் படமெடுத்த அந்த முன்னாள் போராளியானஅரசியல் வாதி செய்ததையே  இவர்களும் செய்தனர். அந்த அரசியல் வாதி திலீபன் நினைவு நாளன்று இரு மாவீரர்களின் பெற்றோராகிய மூன்று குடும்பத்தவரை (வெவ்வேறு) கூட்டி வந்து ஏதேதோ செய்யமுயன்றார்.  திலீபன் நினைவிடத்தில் எந்த அசிங்கமும் நடந்துவிடக்கூடாது; மாவீரரின் பெற்றோரின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சில முடிவுகளை உடனே எடுக்க நேர்ந்தது.எமக்குத் திலீபனே பெரிதாகத் தெரிந்தான். நினைவேந்தலின் ஆரம்ப நாளன்று முறுக்கிக்கொண்ட இரு தரப்பினரிடமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும். தயவு செய்து ஒத்துழையுங்கள் என வேண்டிக்கொண்டிருந்தேன். இருதரப்பும் பூரணமாக ஒத்துழைத்திருந்தன. எப்படியோ உனது நினைவிடத்தின் புனிதம் கெடக்கூடாத வகையில் செயற்படக்கூடிய மன வலிமையை தா என  திலீபனிடம் மனமுருகி வேண்டியிருந்தேன்.     

 ஆனால் கனகபுரத்தில் படமெடுத்தவர்களிடமிருந்து காப்பாற்றுமாறு சிவனிடம் வேண்டத் தவறிவிட்டேன்பூசை முடிந்து விரதச் சாப்பாடு சாப்பிடும்போது "இயக்க மோதல் .... "என்று ராகவன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. அதை அவருக்குச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டேன் என எண்ணினேன்.(அச்சமயத்தில்தான் ஆலயக்காரர் வந்தார்)   தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இயக்கமோதலின் முதலாவது வேட்டு ராகவனாலேயே தீர்க்கப்பட்டது. நினைவுக்கு வந்தது.

மயிலாப்பூரிலிருந்து தலைவர், ராகவன்,நேசன் ஆகியோருடன் நானும் ராமுவும் தான் அன்று புறப்பட்டோம். தலைவர் "comandos." படம் பார்த்தீர்களா எனக் கேட்டார். நானும் ராமுவும் இல்லை என்றோம். நேற்றுத்தான் நான் பார்த்தேன் தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டும். இன்று தான் கடைசி நாள் எனக் கூறி ராமுவையும் என்னையும் அனுப்பிவிட்டு நேசனுடனும் ராகவனுடனும் போனார் பாண்டிபஜாரில் முகுந்தனை (உமாமகேஸ்வரன்)  கண்டார். "முகுந்தன் போல கிடக்கு" என்று ராகவனுக்குச் சொல்லி முடிக்க  முன்னரே முகுந்தன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார் ராகவன்.சுடு என்று தலைவர் சொல்ல முன்னரே இவர் சுட்டு விட்டார்.   

தொடர்ந்து ஒரு பக்கம் முகுந்தனும், கண்ணனும் மறுபக்கம் தலைவரும் இவரும் நின்று துப்பாக்கி சமரை  நடத்தினர். இறுதியில் தலைவரும் இவரும் கண்ணனும் பிடிபட்டனர். மறு நாள் முகுந்தன் பிடிபட்டார் . எல்லாவற்றையும் இன்று மறந்தாயிற்று. எதோ ஒரு வகையில் இயக்க மோதலுக்கு நான் காரணம் என்கிறாரோ?

எது எப்படியிருந்தாலும் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட  மாவீரர்கள் இலட்சக்கணக்கான மக்கள் பிரபாகரனையே நம்பினர். இதற்கு முன் வேறெந்தத் தலைவரும் இவ்வாறு தமிழர் மனதில் இடம்பெறவில்லை. தந்தை செல்வாவைப் போற்றினாலும்  உயிரைக்கொடுத்துப் போராடக்கூடியவராகப்  பிரபாகரனே தெரிந்தார் என்ற விடயம்  இவருக்குப்  புரியவில்லை.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் தலைவர் வளத்த செஞ்சோலைப் பிள்ளைகளின் (கே.பி .இடம் உள்ளவர்கள் அல்ல) நலன் தொடர்பான விடயங்களில் மட்டுமே எனது கவனம் உள்ளது.எந்தக்காலத்திலும் அரசியல் விடயங்களில் தலையிடமாட்டேன்  என இவருக்குத் தெளிவாகச்  சொல்லியிருந்தேன்.

என்னை வரதராசப்பெருமாளின்வரிசையில் வைத்து விட்டார் இவர். வரதராசப்பெருமாளின் தாயார் கூட தனது மகனின் பக்கம் நில்லாமல்  பிரபாகரனின் பக்கமே நின்றவர். கிருஷ்ணானந்தன்(பிரபல பொருளியல் ஆசிரியர்), வணசிங்கா (இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர்.) கனகரத்தினம் ஆசிரியர் , கணபதிப்பிள்ளை ஆசிரியர் முதலான கல்வியலாளர்கள் கொன்ற  குழுவில் அங்கம் வகித்த  வரதராஜப்பெருமாள் போன்று நானும் கணிக்கப்பட்டுளேன்  இவரால்.   

  நான்  நடந்தவற்றை தெரிவித்துள்ளேன் விடுதலையை உண்மையாக நேசித்த மக்கள் பலர் ராகவனைச் சந்தித்தமை பற்றி என்னிடம் தங்களது கவலையை, கோபத்தை தெரிவித்தனர். எனது பிள்ளைகள், நான் நேசித்த தலைவன், கூடப் பழகிய போராளிகள், தலைவரை நம்பி முள்ளிவாய்க்கால் வரை பயணித்து இன்று ஆன்மாக்களாக உள்ளோர்.அனைவரிடமும் எனது நிலையை மானசீகமாக தெரிவிக்கின்றேன் இது ஒரு விபத்து. இப்போது நான் 63 வயதைக் கடந்துவிட்டேன். இவ்வளவு வயதில் சமூகம்,போராட்டம், சிறை போன்றவற்றிலிருந்து அநேக விடயங்களைக் கற்று விட்டேன் என எண்ணியிருந்தேன். நீ படிக்கப் படிக்கப் படிப்பிப்போம் என சிலர் புறப்பட்டுள்ளனர்  .(திலீபன் நினைவிடத்தில் படமெடுத்தவர் மற்றும் ராகவன்) எதுவாக இருந்தாலும் தலைவரையும் போராட்டத்தையும் நேசித்த பல்லாயிரக்கணக்கான இதயங்கள் இந்தச் சந்திப்பால் நொந்துபோய்யுள்ளன என்பதை உணர்கிறேன்.இவர்கள் அனைவரிடமும் நான் மானசீகமாக மன்னிப்பு கோருகிறேன். அரசியல் கலப்பின்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவோம் என்ற ஒற்றைவரிச் செய்திக்கு மதிப்பளித்த  இந்த உறவுகள்தான் எமக்குத் தேவை.

ராகவனும் ஒன்றைப் புரியவேண்டும். பிரபாகரன் நினைத்திருந்தால்   ராகவனாகலாம் (எந்தக் காலத்திலும் எந்த விடயத்திலும் அவ்வாறு அவர் நடக்கமாட்டார் என்பது வேறுவிடயம்) ராகவன் நினைத்தாலும் முயற்சித்தாலும் எக்காலத்திலும் பிரபாகரன் ஆக முடியாது.

 

மீள் பதிவு

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post