ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு 'கவிதை'. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர்.
பின்பு அதை
மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின்
சொத்தான கவிதையை மனநலம் சார்ந்த ஒரு பத்திரிக்கையின் கிருஸ்துமஸ் பதிப்பில் வெளியிட்டார்.
ஒரு காணொளி கோவையும் இந்த எளிய, அனால் தெளிவான கவிதையை வைத்து தயாரிக்கப்பட்டது.
இந்த முதியவர்,
உலகிற்கு பொருளேதும் விட்டு செல்லவில்லை என்றாலும் ‘பெயரிலி’ கவிஞனாக இணையத்தில் உலகை வலம் வருகிறார்.
எரிச்சலூட்டும் முதியவனா?!
---
என்ன பார்க்கிறீர்
செவிலியரே? என்ன பார்க்கிறீர்?
என்னை பார்க்கும்போது
என்ன நினைக்கிறீர்?
மண்டையில் ஏதுமில்லா
- எரிச்சலூட்டும்
முதியவன் என்றா?
எங்கோ வெறிக்கும்
கண்களுடன்..
எக்குதப்பான
தடுமாற்றங்களுடன்..
வாயில் வழியவிடும்
உணவுடன்..
வாய்மொழியற்ற
பார்வையுடன்..
உங்களை, நீங்கள்
செய்வதை கவனிக்காமல்..
எங்கோ ஒரு வெளியில்
-
எல்லாம் இழந்துகொண்டிருக்கும்
நிலையில்..
‘உன்னால் முடியும் செய் பார்க்கலாம்’ – என
உரக்க நீங்கள்
என்னிடம் சொல்லும்போதும்..
எதிர்ப்போ இல்லையோ..
எனக்கு உங்களது
சேவைகளாய் -
உணவூட்டி உடல்துடைத்து..
என் நாளை நிரப்பிக்கொண்டிருக்கும்
நீங்கள் -
என்னை பார்த்து
அப்படித்தான் எண்ணியிருப்பீர்கள்!
அப்படி என்றால்..
நீங்கள் உண்மையில்
என்னை பார்க்கவில்லை..
கண்ணை திறவுங்கள்
தாதியரே!
உங்கள் சொற்படியே
நடந்துகொண்டு..
நீங்கள் தருவதையே
சாப்பிட்டுக்கொண்டு..
இதோ அசைவின்றி
அமர்ந்துகொண்டு
நான் யாரென
சொல்கிறேன்.. கேளுங்கள்!
பெற்றோரும்
உடன்பிறந்த
சகோதர சகோதரிகளுடன்
அன்பால் இணைந்த
பத்து வயது
குழந்தையாகவும்...
பின்பு சிறகு
முளைத்து பறக்கும் மனதுடன்
காதலை கண்டுகொண்டு
கனவுகளுடன்
எனது பதினாறிலும்
இருந்தேன்!
இருபதில் இணையை
தேடிகொண்டேன்!
இதயம்
துள்ளிக்குதிக்க
இன்றும்
இனிமையாய் ஒலிக்கிறது
நான்
எடுத்துக்கொண்ட கல்யாண உறுதிமொழிகள்...
என்துணை
தேடும் மகவுகளுடன்
மனமகிழும்
வீடும் அமைந்து இருந்தது
அதோ
என் இருபத்தைந்தில்..
முப்பது
வயது மனிதனாக
வேகமாய்
வளரும் குழந்தைகளின்
நெருங்கிய
பாசப்பிணைப்பை உணர்ந்தேன்!
நாற்பதில்
இளைஞரான என் மகன்கள்
வளர்ந்துவிட்டதால்
விட்டு சென்றார்கள்..
நான்
கலங்கி போகாமல்
பார்த்துக்கொண்டதென்னவோ
எனது
அருகிலேயே இருந்த துணைவிதான்..
ஐம்பது
வயது ஆனது.. மீண்டும் குழந்தைகள்
என்
காலை சுற்றி விளையாடின..
ஆனால்
எனக்கும் எனது இணைக்கும்
குழந்தைகளை
பற்றிதான் தெரியுமே!
எனக்கு
இருண்ட காலம் உதித்தது..
என்
மனைவி மறைந்துபோனாள்..
எதிரே
என் காலத்தை பார்க்கிறேன்..
நெஞ்சை
உலுக்குகிறது உதறல் எடுக்கிறது..
என்
மகவுகளின் கவனிப்புகளெல்லாம்
அவர்களின்
மகவுகளுக்கே!
எனது
வருடங்களை..
அதிலிருந்த
அன்பை நினைத்துப்பார்க்கிறேன்!
இப்போது
நான் முதியவன்...
இயற்கை
கொடூரமானது –
அது
எள்ளிநகையாடி
முட்டாளாக்கும்
முதுமையை திணிக்கிறது..
வனப்பையும்
வீரியத்தையும்
உதிர்கிறது
என் உடம்பு
இதோ
கல்லான இதுகூட
இதயமாய்
இருந்ததுதான் ஒருகாலத்தில்..
ஆனால்
பிணம்போன்ற இந்த உடலில்
உள்ளேயொரு
இளைஞனாக இன்றும்
இழைந்துகொண்டேதான்
இருக்கிறேன்!
உழைத்து
ஓய்ந்துவரும் இதயம்
வீங்கி
ஏங்குகிறது..
அந்த
மகிழ்ச்சிகளும் வலிகளும்
நீங்காமல்
நிலைக்கிறது..
வாழ்க்கையை
அனுபவித்து
மீண்டும்
வாழ நினைக்கிறது..
கடந்த
வருடங்கள் என்னவோ சிலதுதான்..
ஆனால்
விரைந்து கழிந்து போனதே..
எதுவும்
நிலைத்திருக்க முடியாது என்ற
எளிய
அறிவை இங்கு ஏற்கவைக்கிறது..
ஆகவே
கண்களை திறவுங்கள் மக்களே
திறந்து
பாருங்கள்..
இங்கே
எரிச்சலூட்டும் முதியவனில்லை
உற்று
நோக்குங்கள்..
பாருங்கள்...
நான்!
Face book ;
DrSurya CR is with Aarathy Trust.
Post a Comment