காஷ்மீர் -இந்திய ஒப்பந்தத்துக்கு நடந்தது என்ன?

1987 ல் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று இப்போதும் சொல்லித் திரிகின்ற முன்னாள் டோ(தா)லர்களே!

காஷ்மீர் -இந்திய ஒப்பந்தத்துக்கு நடந்தது என்ன? காஷ்மீரின் இன்றைய நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

காஷ்மீர்  1947 வரை இந்திய உபகண்டத்தில் இருந்த ஒரு தனிநாடு.அந்த நாட்டின் கடைசி மன்னரின் பெயர் ஹரி சிங்.

இந்த நாட்டின் மக்கள் காஸ்மீரிகள் என்று அழைக்கப்பட்டார்கள்.இவர்களில் பெரும்பகுதியினர் இஸ்லாத்தையும் சிறு பகுதியினர் இந்து மதத்தையும் பின்பற்றினர்.1940 கள் வரை அவர்களிடம் மத முரண்பாடு இருக்க வில்லை.எல்லோரும் காஸ்மீரிகள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்திருந்தார்கள்.

ஆனால் 1940 களின் பின்னர் அகண்ட இந்திய நிலப்பரப்பில் முளை விட்ட மத அடிப்படை வாதம் காஸ்மீரி மக்களையும் தொற்றிக்கொண்டது.

1947ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப்  பிரிந்தபோது பொது ஜம்மு-காஷ்மீரிலிருந்த இந்துக்கள் சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களில் குறிப்பிட்ட பகுதியினர்  இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்பினார்கள்;. அதேபோல மேற்கு ஜம்மு உள்ளிட்ட சில மாவட்டங்களிலிருந்த இஸ்லாமியர்கள் சிலர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று விரும்பினார்கள்;.ஆனால் பெரும்பாலான காஸ்மீரிகள் இந்த இரண்டு நாடுகளுடனும் இணையாமல் தாங்கள் தனித்திருக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.

காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங் இந்து மதத்தைச் சேர்ந்தவர். 1947 ல் இடம்பெற்ற  இந்திய பாகிஸத்தான் பிரிவினையின்போது காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி எழுந்தது. மன்னர் ஹரி சிங் இந்த இரு நாடுகளுடனும் இணைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.

இந்த முடிவு இரு நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. இதன் விளைவாகத் திட்டமிட்டு மத முரண்பாடு கூர்மைப்படுத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாகிஸ்தான், 'இசுலாமியர்களைக் காப்பதற்காக' என்று கூறிக்கொண்டு; காஷ்மீர் மீது படையெடுத்து  ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது.  பாகிஸ்தானின் படையெடுப்பிலிருந்து காஷ்மீரைப்  பாதுகாப்பதற்காக  மன்னர் ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். இதைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்குமாறு இந்திய ஆலோசனை  கூறியது.  அதை ஏற்றுக்கொள்வதைத் தவிரக்  காஷ்மீர் மன்னருக்கு வேறு வழி இருக்கவில்லை.இதை அடுத்து  இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மன்னர் ஹரி சுங்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதாவது இருவரும் 'Instrument of Acession'' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைய ஒப்புக்கொண்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய விஷயங்களில் இந்திய அரசு முடிவு எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்தப் பிரச்சனை ஐநா வரை சென்றது. ஐநா சபை பாகிஸ்தான் படைகளும்  இந்தியப் படைகளும் ; காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஐநா உத்தரவிட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன்  இணையுமா அல்லது பாகிஸ்தானுடன் இணையுமா என்பது குறித்து அம்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்; என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால்  இன்று வரை அந்த வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

1947ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. அத்துடன் 1952ஆம் ஆண்டு    காஷ்மீரில் தலைவர்  ஷேக் அப்துல்லா மற்றும் இந்தியப் பிரதமர் நேரு ஆகியோர் இடையே டெல்லியில் இன்னொரு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை விரிவாகத் தெளிவு படுத்தியது.

ஆனால் தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டது.

அரசுகளாலும் அரச தலைவர்களாலும் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் வெறும் காகித ஒப்பந்தங்களே என்பதற்கு  காஷ்மீர் -இந்திய ஒப்பந்தம் சிறந்த எடுத்துக்காட்டாகும்

சிவா சின்னப்பொடி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post