தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் - 10.01.1974 !

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி  தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்த உலகத் தமிழர்கள் பெரும் அளவில் தயாராகி வந்தனர். இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த  சிறில்கா அரசாங்கம் அப்போது விரும்பவில்லை.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மேயர் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை  நிர்மாணிப்பதற்கான அனுமதியும் கடைசி நிமிடம் வரை வழங்கப்படவில்லை.

ஆயினும் 1974ஆம் ஆண்டு  4வது உலகத் தமிழராய்ச்சி மநாட்டை  யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானம் எடுத்தது. அப்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கையின் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா அதனை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாது தடுப்பதற்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் முனைப்பாக இருந்ததால் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த வெளிநாட்டு மொழியியலாளர்களான தமிழ் ஆராய்ச்சியாளர்கள் பலரின் விசாக்கள் மறுக்கப்பட்டன. இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும் மாநாட்டு அமைப்பாளர்களும் தமிழ்மக்களும் ஏற்பாடுகளைத் தொடர உறுதியாக இருந்தனர்.

தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு தமிழ்மக்களின் பேராதரவையும் விடாப்பிடியான முடிவையும் கண்ட அரசாங்கம் சிறிது கீழே இறங்கி குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே விசாக்களை வழங்கியது.

அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க அஞ்சியோ என்னவோ தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவதை விரும்பவில்லை. ஆயினும் எனைய அனைவரும் யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால் அவர் வேறு வழியின்றித் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்று கருதிய பேராசிரியர் சு.வித்தியானந்தன் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார்.

அரசின் இந்த நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையின்கீழ் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய திட்டமிட்டபடி 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 3 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் யாழ்ப்பாண நகருக்கு வந்து சேர்ந்தனர்.

ஜனவரி மாதம் 10ஆம் திகதியே மாநாட்டின் இறுதி நாளாக இருந்ததால். அன்றையநாள் மிகவும் சிறப்பாக ஆய்வரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆய்வரங்கத்தின் இறுதி நிகழ்ச்சியாகமொழியின் மகத்துவம் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு  என்னும் தலைப்பில் தமிழ்மொழி ஆய்வாளர்களினால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது அவர்கள் இறுதியாக சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தின் பொழுது புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்த வெற்றி விழாவைக் கண்டு சகிக்காத சிங்களப் பொலிசார்

10 ஆம் திகதி இறுதிநாள் கலை பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றபொழுது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர் சந்திரசேகராவின்  தலைமையில் 40 பொலிசாரைக் கொண்டுவந்து தமிழ் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

அதேவேளை மின்கம்பியை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டதும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அதேவேளை மாநாட்டு ஆய்வரங்க மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் பொலிசாரினால் உடைத்தெறியப்பட்டன. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் 11 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டு 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

அதுவரை நிலவிய மகிழ்ச்சியும் உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல்போய் சிறிது நேரத்திலேயே அந்த இடம் மயான பூமியாகக் காட்சி அளித்தது. அன்று இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகராவுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காபொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தார்.

கொல்லப்பட்டவர்களில் கிடைக்கப்பெற்ற 09 பேரின் விபரங்கள் :

01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  (மாணவன் 15 வயது)         

02 பரம்சோதி சரவணபவன்   (26 வயது)

03 வைத்தியநாதன் யோகநாதன் (32 வயது)

04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (ஆசிரியர் 53 வயது)

05 புலேந்திரன் அருளப்பு   (தொழிலாளி  53 வயது)

06. இராசதுரை சிவானந்தம் (மாணவன் 21 வயது)

07 இராஜன் தேவரட்ணம்  (26 வயது)

08 சின்னத்துரை பொன்னுத்துரை (ஆயுள்வேத வைத்தியர்  56 வயது)

09. சின்னத்தம்பி நந்தகுமார்  (மாணவன் 14 வயது)

 

நன்றி  : பொன் மாஸ்டர் (facebook)

 

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post