பணியின் தேவை கருதி பகலிரவாக ஓயாது உழைத்தவள்!
கப்டன்
சுடரொளி
வீரப்பிறப்பு
09.04..1974 - வீரச்சாவு 16.12.1997
பூநகரி ,கிளிநொச்சி
வடதமிழீழத்தின்
கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும்
யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையிலே மொட்டைக் கறுப்பன், பச்சைப் பெருமாள் ஆகிய பாரம்பரிய
நெல்லினங்கள் விளையும் வளமான நிலமும் எத்தனையோ மாவீரர்களையும் கரும்புலி வீரர்களையும்
நாட்டுக்கீய்ந்த வீரம் விளைநிலமான பூநகரி எனும் ஊரிலே ஐந்து அக்காக்கள், மூன்று அண்ணாக்கள் கொண்ட பெரிய
அழகான குடும்பத்திலே திரு.திருமதி கந்தர் தம்பதியினருக்கு கடைசிப் புதல்வியாக
09.04.1973 இல் ஞானசகுந்தலா அக்கா பிறந்தார். அவர்களது குடும்பமானது எமது விடுதலைப்
போராட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தோள் கொடுத்து வந்த குடும்பம் ஆகும். தேசப்பற்றுக்
கொண்ட அந்தக் குடும்பத்தில் பிறந்த ஞானசகுந்தலா அக்காவின் புறச்சூழல்கள் அவருக்கு குழந்தைப்
பருவத்திலிருந்தே விடுதலைத்தீயை வளர்க்கத் தொடங்கின.
அவரது தந்தையார்
ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய உழவர் ஆவார். அவர் ஒரு உழவராக இருந்தபோதிலும் தனது குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த
கல்விமான்களாக ஆக்க வேண்டும் என்ற கொள்கையில் வெயில், மழை பாராது வயலில் கடும் பணிபுரிந்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தனது குழந்தைகளை
நன்றாக கல்வி கற்க வைத்தார். அவர்களும் தந்தையின் கடின முயற்சியும் நம்பிக்கையும் வீண்போகக்
கூடாது என்ற எண்ணத்தில் மிகவும் உத்வேகத்துடனும் ஊக்கமுடனும் கல்விகற்று மூத்த பிள்ளைகள்
எல்லோரும் அரசபணியில் நல்ல நிலையில் பணிபுரிந்து வந்தனர்.
அந்த வகையில்
ஞானசகுந்தலா அக்காவும் பெயருக்கு ஏற்றபடி கல்வி ஞானத்தில் வல்லவராக தனது ஆரம்பப் பள்ளிக்கல்வியை
ஆண்டு 5 வரை பூநகரி செல்வபுரம் அ.த.க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பின்பு ஆண்டு
6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை யாழ்.மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் பாடசாலையின்
மாணவர் தங்கு விடுதியில் தங்கியிருந்து கல்விபயின்று வந்தார். அவர் படிப்பு, விளையாட்டு,
சதுரங்கப் போட்டி என்பனவற்றில் சிறந்து விளங்கினார். கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும்
இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு நிறைய வெற்றிக்
கேடயங்களைப் பெற்றுக்கொடுத்தார். "விளையும் பயிரை முளையில் தெரியும்" என்ற
பழமொழிக்கேற்ப பின்னாளில் சிறந்த ஒரு கணக்காய்வாளராக வருவதற்கு அடையாளமாக மிகக் கூரிய
அறிவு படைத்து யாழ் மாவட்டத்திலே அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலாக நடைபெறும் சதுரங்கப்
போட்டிகளில் பல பரிசுகளை வென்று தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்தார். அதுமட்டுமல்ல
அவர் படிப்பிலும் சிறந்து விளங்கினார். க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி அதி திறமைச்
சித்திகள் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1992 வது அணியில் வர்த்தகப் பிரிவை தேர்ந்தெடுத்து
கல்வி பயின்று வந்தார்.
எமது தமிழீழப்
போராட்ட வரலாற்றில் 1991 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஆகாய கடல்வெளி ஆனையிறவுச் சமரானது பெரும்
முதன்மை வாய்ந்தது. இந்நடவடிக்கையானது 10.07.1991 தொடங்கி 53 நாட்களாக நீடித்தது. இதன்
போது (சிறிலங்கா அரசின் வேண்டுதலுக்கமைய செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விடுதலைப் போராளிகளால்
கையகப்படுத்தப்பட்ட 28 அரச படையினரின் உடல்களை வழங்குமாறு எமது தேசியத்தலைவர் பணிப்பிற்கு
இணங்க, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. ராஜன் அவர்கள் அரச படையினரின் உடல்களை
பதப்படுத்தி, அரசியல் துறைப் போராளி தேவ் தலைமையில் யாழ்ப்பாண பலாலி கடற் பரப்பில் சர்வதேச செஞ்சிலுவை
சங்க நடு நிலையில் கடற்படையினரின் கடல் கப்பலில் கையளிக்கப்பட்டது.) இதன் போது நாம்
573 மாவீரர்களை விலையாகக் கொடுத்தோம்.
அந்தப் போர்க்களமானது
இந்த உலகிற்கும் ஒரு செய்தியை உணர்த்தியது. அதற்கும் மேலாக எமது மக்களிற்கும் ஒரு நம்பிக்கையை
உணர்த்தியது. நாம் எமது நாட்டிலே சுதந்திரமான ஒரு சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து,
நாம் தமிழீழ மக்கள், இந்த நாடு எமது தமிழீழ நாடு என்று பெருமை கொண்டு உரிமையுடன் எமது
சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து நாமே நமது நாட்டை அமைக்க எமக்கு உறுதியான ஒரு படை
உண்டு, அந்தப் படையில் எமது நாட்டுக்கான போராட்டத்தை எமது நாட்டுக்கான இராணுவத்தை அமைக்க
முடியும் என்ற செய்தியை உலகிற்கு மட்டுமல்ல எமது எதிரிக்கு மட்டுமல்ல எமது மக்களிற்கும்
உறுதியாக உணர்த்தி நின்றது ஆனையிறவுப் போர்க்களம்.
அந்த வகையில்
ஞானசகுந்தலா அக்காவும் ஆ.க.வெ ஆனையிறவுப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் 1991 ஆவணி மாதத்தில்
இன்றைய எமது தேவை உறுதியுள்ள ஓர் இனம் என்றும் தனது சுதந்திரத்திற்காக எவரிலும் எவர்
மீதும் தங்கியிருக்காது தனது சுதந்திரத்திற்கு தன்னையே நம்பி தன்னை அடிமைகொள்ள நினைக்கும்
எவரையும் எதிர்த்து நின்று தனது நாட்டிற்காக தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும்
ஒரு வீர மங்கையாக தன்னை உருவாக்க தீர்மானித்து உணர்வுகொண்டு எமது போராட்டத்தில் தன்னை
இணைத்துக் கொண்டார். அங்கு எமது மகளிர் பயிற்சிப் பாசறையில் 23 ஆவது அணியில் அடிப்படைப்
பயிற்சி பெற்று 1992 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் சுடரொளி எனும் பெயருடன் வரிப்புலியாகி
அரசியல்துறைப் போராளியாக நியமிக்கப்பட்டார்.
1992-1993 ஆம்
ஆண்டு வரை அரசியல்துறை மகளிர் பிரிவில் நிதிப் பொறுப்பாளராக தனது பணியைத் திறம்பட தியாக
மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஆளுமையுடனும் மேற்கொண்டார். எமது போராட்டத்தைப்
பொறுத்தவரையில் மக்கள் வேறு புலிகள் வேறு அல்ல. “மக்கள் தான் புலிகள் புலிகள் தான்
மக்கள்”. இது உலக நாடுகள் அனைத்தாலும் உணர்ந்துகொள்ளப்பட்ட
விடயம் ஆகும்.
அந்த வகையில்
சுடரொளி அக்காவும் தனது அரசியல் பணியின்போது மக்களோடு மக்களாகவே, அவர்களில் ஒருவராகவே
வாழ்ந்திருந்தார். அவரது கனிவான பார்வையும், எந்நேரமும் சிரித்த முகமும், சுறுசுறுப்பும்,
அமைதியான மனப்பாங்கும் எம் மக்களை அவர்பால் ஈர்த்தது. எமது போராட்டத்துக்கு உதவி செய்த
மக்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று அவர்களின் இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்து
இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்வார். மேலும் மக்களின் சிக்கல்கள், இடர்பாடுகள் உடனடித்
தேவைகள், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான
உதவிகள் போன்றனவற்றை அறிந்து உதவி செய்வார். அந்த அளவுக்கு தனது மக்களை நேசித்த போராளி
அவர்.
1991ஆம் ஆண்டு
எமது போராட்டமானது பல துறைசார் வளர்ச்சிகளினைக் கண்டிருந்தது. அந்த வகையில் எமது தேசியத்
தலைவர் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்துரையாடி எமது
நிதித்துறை வாணிபங்களின் கணக்குகள் தொடர்பிலான நடவடிக்கைகளை நிருவகிக்க போராளிகளினால்
மட்டுமே அர்ப்பணிப்புடனும் இதயத்தூய்மையுடனும் செயற்பட முடியும் என்பதனை உணர்ந்து நிதித்துறை
கணக்காய்வுப் பகுதி என்ற பிரிவினை உருவாக்கினார். எனவே, அதற்கு கணக்கியல் அறிவும் அனுபவமும்
புலமையும் உடைய போராளிகள் மற்றைய பிரிவுகளில் இருந்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு
உள்வாங்கப்பட்டனர். அந்த வகையில் சுடரொளி அக்காவும் நிதி தொடர்பான கணக்கு நடவடிக்கைகளில்
அவரது புலமை, கூரறிவு என்பன இனங்காணப்பட்டு 1993ஆம் ஆண்டு நிதித்துறை மகளிர் கணக்காய்வுப்
பகுதிக்கு உள்வாங்கப்பட்டார்.
அங்கு 1993ஆம்
ஆண்டு காலப்பகுதியில் பருத்தித்துறைப் பகுதியில் ஆயப்பகுதி, வருவாய்ப் பகுதி மற்றும்
எமது நிதித்துறை வாணிபங்களில் ஒன்றான சேரன் வாணிபத்தின் யாழ்ப்பாணன் விற்பனை நிலையம் போன்றனவற்றில் தனது கணக்காய்வுப்
பணியைத் திறம்பட மேற்கொண்டார். அத்துடன் தமிழீழ மீட்பு நிதி தொடர்பான பணிகளையும் மேற்கொண்டார்.
பின்பு
1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணித்தேவையின் தகுதி கருதி பல்கலைக்கழகத்திற்கு செல்லாத
மற்றைய நிதித்துறை ஆண், பெண் போராளிகள் அனைவரையும் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில்
கல்வி கற்கும்படி பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவினால் பணிக்கப்பட்டனர். அந்த வகையில்
சுடரொளி அக்காவும் அவ்வணிக்குத் தெரிவாகினார். அவர் அந்தக் கற்கைநெறியினை மிகுந்த விருப்புடனும்
ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டார். அங்கே ஒன்பது மாதங்கள் போராளிகள் அனைவரும்
காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கைநெறியினையும் மாலை
நேரத்தில் தமக்கென ஒதுக்கப்பட்ட வாணிபங்களின் கணக்காய்வுப் பணியினையும் சோர்வடையாது
மேற்கொண்டனர். அதைவிட அவர்களுக்கு இரவு நேரங்களில் யாழில் புகழ்பெற்ற வணிகத்துறை சார்ந்த
ஆசிரியர்களினால் சிறப்பு வகுப்புகளும்
நடைபெறுவதுண்டு.
சுடரொளி அக்காவும்
சிறிதும் சோர்வடையாமல் கற்கைநெறியினையும் மேற்கொண்டு அதே நேரத்தில் கணக்காய்வுப் பணியினையும்
மேற்கொண்டு, நன்கு புடம் போடப்பட்டு நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் தலை சிறந்த
கணக்காய்வாளர் ஆகினார். பின்பு 1995ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நகை வாணிபம், சேரன்
இரும்பகம், எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும் தனது கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டார்.
1995ஆம் ஆண்டு
ஐப்பசி மாதம் அரச படையினரின் சூரிய கதிர் நடவடிக்கையினால் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி
மட்டுவில் பகுதியில் எமது முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு வாணிபங்களுக்கான கணக்காய்வுப்
பணிகள் அங்கிருந்து மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பங்குனி மாத நடுப்பகுதிகளிலும் அங்கிருந்து
வன்னிப் பெருநிலப்பரப்புக்கு யாழ் கிளாலி நீர் ஏரியூடாக இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்புப் பகுதியில்
எமது முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு எமது நிதித்துறை வாணிபங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வுப்
பணிகள் பெரும் இடர்பாடுகளுக்கு நடுவில் சீராக
மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில்
சுடரொளி அக்காவும் தனது கணக்காய்வுப் பணியை போதிய வசதியின்மை காணப்பட்டும் கிடைத்த
வளங்களைக் கொண்டு செவ்வனே தனது பணியை மேற்கொண்டார்.
அக்காலப்பகுதியில் எமது மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருண்மியத்தடையின் விளைவாக ஏற்பட்ட
எரிபொருள் தட்டுப்பாட்டினால் உந்துருளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. அதனால்
சுடரொளி அக்கா பணி நிமித்தம் புதுக்குடியிருப்பிலிருந்து துணுக்காய் மல்லாவி, மாங்குளம்
போன்ற இடங்களுக்கு ஈருருளி மூலமே பயணம்செய்து தனது உடற்சோர்வையும் பொருட்படுத்தாது,
முழு ஈடுபாட்டுடனும் விருப்புடனும் தனது பணியினை மேற்கொள்ளுவார்.
1995 இல் வலிகாமம்,
பின் 1996 இல் தென்மராட்சிப் பகுதி போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியை
வந்தடைந்ததால் எமது போராளிகள், மற்றும் மக்களின் உளவரணானது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.
இதனால் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதிலடி
கொடுக்கவும் எமது போராளிகள், மக்களின் உளவரண் வலுப்பெறுவதற்குமாக, “எந்த ஒரு பலத்திலும்
பலவீனம் இருக்கவே செய்யும். அதனைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில் தான்
வெற்றியின் இரகசியம் இருக்கின்றது” என்ற கொள்கையுடைய எமது தேசியத் தலைவர்
ஓயாத அலை 1 என்ற தாக்குதல் நடவடிக்கையை முல்லைத்தீவிலுள்ள மிகப்பலமாக அமைக்கப்பட்டிருந்த
சிறிலங்கா இராணுவ முகாம் மீது மேற்கொள்ளத்
தீர்மானித்தார்.
இதற்கான ஆளணிப்
பற்றாக்குறை நிலவிய காரணத்தினால் எமது பிரிவில் இருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவராகச் சுடரொளி அக்காவும் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள் கடும்
பயிற்சியின் பின் சிறப்பு அணியில் ஒருவராகத் தெரிவுசெய்யப்பட்டு ஓயாத அலைகள் 1 வலிந்த தாக்குதல் நடவடிக்கையில்
திறம்படக் களமாடி பின்பு சிறிலங்கா அரச படையினரின்
சத்ஜெய 1 தாக்குதல் நடவடிக்கையிலும் திறமையாகக் களமாடி வெற்றியுடனும் பெரும் மனநிறைவுடனும்
எமது முகாமிற்குத் திரும்பினார்.
பின்பு அவர்
1997 ஆம் ஆண்டு மார்கழி மாதம் உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடையும் வரை எமது நிதித்துறை
வாணிபங்களில் ஒன்றான நகை வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு அணிப்பொறுப்பாளராகப் பொறுப்பேற்று
விடுதலைப் போராட்டப் பங்களிப்பைச் செய்துவந்தார். பணியிடத்தில் பணியாளர்களுடன் மிகவும்
அன்பாகவும் பண்புடனும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்புடனும் ஆளுமையுடன் நடந்துகொள்வார்.
துணுக்காய்,
மல்லாவி, மாங்குளம், விசுவமடு, முழங்காவில், புதுக்குடியிருப்பு, ஸ்கந்தபும், தண்ணீரூற்று
போன்ற இடங்களில் உள்ள நகை வாணிபங்களுக்கு தனது 125 ரக உந்துருளியில் பயணம்செய்து தனது
கணக்காய்வுப் பணியினை மேற்கொள்ளுவார். குள்ளமான மெல்லிய தோற்றமுடைய அவர் தன்னை விட
பெரிய 125 ரக உந்துருளியை ஓட்டும் அழகை நாங்கள் "துவைக்கிற கல்லில தவளை உட்கார்ந்து
இருக்கிறது போல இருக்குது" என்று கிண்டல் பண்ணுவோம். அதனை அவர் கோபிக்காமல் இயல்பாக
எடுத்து புன்னகைத்து விட்டுச் செல்வார். சக போராளிகளை மதித்து அரவணைத்து
அன்புடன் நடந்து கொள்ளுவார். புதிய போராளிகளுக்கு கணக்காய்வு நடவடிக்கைகளை இலகுவாகப்
புரிந்துகொள்ளக் கூடிய வகையில் அதன் நெளிவு சுளிவுகளை இலகுவான முறையில் துல்லியமாக
புரியவைப்பார்.
பணி என்று வந்து
விட்டால் உணவு, உறக்கம் அவருக்கு இரண்டாம் இடம்தான். பெரும்பாலும் தனது தொலைவுப் பயணங்களில்
தனது நேரத்தினை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் பகல் முழுவதும் பணி புரிந்துவிட்டு
தொலைவுப் பயணங்களை இரவில் தான் மேற்கொள்ளுவார். பயணத்தின் போது உணவு உட்கொள்ளும் நேரத்தைக்
கூட சிக்கனப்படுத்தி ஒரு போராளியை உந்துருளியைச் செலுத்த விட்டு தான் பின்னிருக்கையில்
அமர்ந்து உணவினை உட்கொள்வார்.
வாணிபங்களின்
முடிவுக் கணக்குகள் சமப்படாமல் பிழைக்குமெனில் எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்துக்
கொண்டு உறக்கத்தின்போது கூட பேரேட்டை ( ledger) தலையணை போல் வைத்துக்கொண்டு படுத்திருந்து
உறக்கத்தில் இருந்து திடீரென விழித்து தவறினைக் கண்டு பிடித்து சீர்செய்வார். நாங்கள்
கூட எங்களது வாணிபங்களின் முடிவுக் கணக்குகள் சமப்படாவிட்டால் எப்படிப்பட்ட சிக்கலான
கணக்கு என்றாலும் அவர் கண்டு பிடித்து சீர்செய்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் சுடரொளி
அக்காவையே நாடுவதுண்டு. தடிமன், காய்ச்சல், தலையிடி போன்ற நோய்கள் வந்தால் ஒரு நாள்
கூட ஓய்வெடுக்காமல் வலி நிவாரணி மாத்திரையைப் (panadol) போட்டுவிட்டு தனது பணிக்குப்
புறப்பட்டு விடுவார். இதனால் அவரது உடல் நிலை சீரற்றுக் காணப்பட்டது. ஆனால் அவர் அதைப்
பற்றி யோசிக்காது
தன்னை முழுமையாக
கணக்காய்வுப் பணிக்கு அர்ப்பணித்த போராளியாக இருந்தார்.
எனக்கு அவரைத்
தெரிந்த நாள் முதல் அவர் விடுமுறையில் அவரது வீட்டிற்குச் சென்று ஒரு நாளுக்கு மேல்
தங்கி நின்றதைப் பார்த்ததில்லை. விடுமுறையில் நிற்கும் நாட்களைக் கூட சிக்கனப்படுத்தி
அந்த நாட்களில் கூட தனது கணக்காய்வுப் பணியை மேற்கொண்டு "அண்ணை எங்களை நம்பி இந்தப்
பணியைத் தந்திருக்கிறார்....அந்த நம்பிக்கையை நாங்கள் வீணடிக்கக் கூடாது" என்று
கூறுவார்.
தமிழீழத்தை
தமிழர் பண்பாட்டின் தொட்டிலாகவும், இன்றைய உலகின் அறிவியலில் உச்சத்தைத் தொட்ட நாடாகவும்
உருவாக்கிட வேண்டும் என்பது எங்கள் தேசியத்தலைவனின் பெருங்கனவு. அப்படியாக, தமிழரின்
தொன்மையான வரலாற்றைக் கற்றிட வகை செய்யும் நூல்களையும், இன்றைய உலகப் போக்கின் அறிவியற்
புதுமைகளை அறிந்திட உதவிடும் நூல்களையும் கற்குமாறு எமது போராளிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.
அதிலும் போராளிகள் சுமந்து நிற்கும் துறைசார் கடைமைகளைச் செவ்வெனே செய்ய உதவிடும் நூல்களைக்
கற்றறிந்து அந்தத்துறைசார்ந்து போராளிகளின் அறிவை இற்றைப்படுத்தத்தக்க வகையில் எமது புரட்சிகர இயக்கம் நூல்களைக் கொணர்வித்தும்
தமிழாக்கம் செய்தும் போராளிகளின் கைகளில் சேர்க்கும். அப்படியாக எமது துறைசார்ந்து
எமது அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள தமிழேந்தி அப்பா அத்தனை முயற்சிகளையும் செய்வார்.
எனவே, துறைசார்
வாசிப்பும், கலை இலக்கிய மற்றும் உலகந்தழுவிய தேசிய இனவிடுதலைப் போராட்ட வரலாற்று நூல்கள்
என்பவற்றை நேரம் வாய்க்கையில் எல்லாம் வாசிக்கும்
பழக்கம் எமது போராளிகளில் பெருமளவானோரிடம் உண்டு. சுடரொளி அக்காவும் அத்தனை வேலைப்பளுவுக்குள்ளும்
தனது வாசிப்புப் பழக்கத்தைக் கைவிட்டதில்லை.
எந்தவொரு இயல்பான
உணவையும் அவர் சுவைத்துச் சாப்பிடுவார். எடுத்துக்காட்டாக, எமது உணவு வழங்கல் பகுதியில்
இருந்து வரும் கத்தரிக்காய்க் கறியினைக் கூட (நிறைய போராளிகளுக்கு சேர்த்து உணவு தயாரிப்பதனால்
அதன் சுவை குறைவாகவே காணப்படும்) சுவையான கோழி இறைச்சிக் கறியினைச் சாப்பிடுவது போல
சுவைத்துச் சுவைத்து உண்ணுவார். அவர் அப்படி உண்ணும் அழகைப் பார்த்து எமக்கும் கூட
அதை உண்ண வேண்டும் என்ற அவாத் தோன்றும்.
அவர் கணக்காய்வுப்
பணியினை மேற்கொண்டாலும் அவரது எண்ணங்களில் எப்போதும் போர்க்களங்களுக்குச் செல்ல வேண்டும்
என்ற அவாவே காணப்பட்டது. எந்நேரமும் களத்தில் நிற்கும் போராளிகளை நினைத்துக் கவலைப்படுவார்.
"நாங்கள் இங்கே இப்படி வசதியாக இருக்கிறோம்...களத்தில் நிற்கும் போராளிகள் பனி,
வெயில், மழை, உணவு, உறக்கம் பாராது பணிபுரிந்து எவ்வளவு இன்னல்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்"
என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார். தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைக்கும்படி
தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்தார்.
அவரின் பணியின் தேவைகருதி அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு தலைவரிடம் இருந்து பதில்
வந்தும் மீண்டும் மனம் சோராமல் மறுபடியும் தன்னைக் கரும்புலிகள் அணியில் உள்வாங்கும்படி
தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டுப் பதிலுக்குக் காத்திருந்தார்.
இவ்வாறு எந்நேரமும்
ஓய்வு ஒழிச்சலின்றி தனது கணக்காய்வுப் பணியையே முழு மூச்சாக மேற்கொண்டு தனது உடல்நிலையை
சரிவரக் கவனத்தில் கொள்ளாது இருந்த காரணத்தினால் நீண்ட நாட்களாக இனந்தெரியாத வகைக்
கொடிய காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்போதும் கூட
முகாமில் வைத்து தனது வாணிபங்களின் ஆவணங்களை வரவழைத்து கணக்காய்வினை மேற்கொண்ட சுடரொளி
அக்கா, அன்று சாவடைந்த நாளன்று பகல் கூட தனது வாணிபத்தின் சமப்படாக் கணக்கொன்றினை
[18:11,
29.5.2022] Nila Tamil: சமப்படுத்திக் கொடுத்துவிட்டு 16.12.1997 அன்று இரவு எம்மையெல்லாம்
துயரில் ஆழ்த்தி விட்டு தனது கரும்புலிகள் அணியில் சேர்வதற்கான கனவினையும் மனதில் சுமந்துகொண்டு
தனது பணியினை மற்றைய போராளிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீளாத் துயில்
கொண்டுவிட்டார்.
தொடர்புக்கு::
niththiyananthan92@gmail.com
Post a Comment