எங்களின் கண்ணீரில் நெய்விளக்கு ஏற்றுகின்றோம்!

எரித்த சாம்பலில் எஞ்சிய சாம்பற் குஞ்சுகள் நாங்கள்..... 

குற்றுயிரும் கொலையுயிருமாய் குவிக்கப்பட்ட சதைக் குவியலில் இருந்து கொஞ்சமாய் உயிர்த்த பீனிக்ஸ் பறவைக் குஞ்சுகள் நாங்கள்......

நந்திக் கடலோரத்தில் நாதியற்றவர்களாய் மிதந்தவர்களின் வம்சக் குருத்துகள் நாங்கள்.....

முள்ளிவாய்க்காலில் குருதியாறு பாய கொட்டும் குண்டுகளோடு தீக்குளித்தேறிய சாபக் குஞ்சுகள் நாங்கள்....

அப்பா,அம்மா,உடன்பிறப்புக்கள் என உற்ற உறவுகளை பற்றிய கைகளோடு பறி கொடுத்த அபலைக் குஞ்சுகள் நாங்கள்....... சொந்த இடத்தில் கால்களை விட்டு விட்டு சொந்தமில்லா ஓரிடத்தில் இழுத்துப் போடப்பட்ட ஏதிலிக் குஞ்சுகள் நாங்கள்......

ஆலாயிருந்த எங்கள் தலைவர் மாமா கீழிருந்து அலைத் துரும்பாய் அடித்துப் போடப்பட்ட சிறு தளிர்கள் நாங்கள்.......

ஒரு கூட்டுக் கிளிகளாக கூடியிருந்து இன்று தனிக் கூட்டுக் கிளியாகப் பரிதவிக்கும் பாலகப் பிறப்புக்கள் நாங்கள்.......

உடற் குறையோடும் பெரும் உளக்குறையோடும் பலி கொடுத்த எங்களின் சந்ததிப் பெரு விருட்சங்களுக்கு உங்களின் அக்கினிக் குஞ்சுகளான நாங்கள்,எங்களின் கண்ணீரை நெய்யாக்கி ஏற்றுகின்றோம் தீபங்கள்.....

அழுதும் அணைந்திடாமல் கொழுந்து விட்டு எரிகின்றன தீபங்கள் தீப்பந்தங்களாய்.....

ஜெ.சுடரினி.






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post