இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கப்பாடுபடும் மும்மூர்த்திகள் !

-அவதானி

"கிழக்கு மாகாணம்  ஆளுநர் செந்தில் தொண்டைமானின் அப்பாவின் சொத்துக் கிடையாது" என தனது அரும்பு மீசையை முறுக்குகிறார் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அகமத். ஆளுநராக அனுராதா யஹம்பத்  இருந்த போது வாயில் பிளாஸ்டர் போட்டு மூடிக்கொண்டிருந்த இவருக்கு இப்போது வீரம் பிறந்துள்ளது. அனுராதா இருக்கும்போது இவ்வாறு ஒரு எச்சரிக்கையை விட்டிருந்தால் இவரை ஒரு ரோஷமுள்ள அரசியல் வாதியாக கருதியிருக்கலாம்.இந்த நாட்டுக்கே சொந்தமில்லாத இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்தான்  செந்தில் தொண்டமான் என்பதே இவர் மறைமுகமாக சொல்லும் செய்தி.

தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான கால் நடைகளின் மேய்ச்சல் தரைகளில்  கிழக்கு மாகாணத்தைச் சாராத சிங்களவர்கள் அனுராதாவின் ஏற்பாட்டில் புரிந்த அடாவடிகளின் போது எதாவது அறவழிப் போராட்டங்களில்  பங்குபற்றியிருந்தால் அல்லது நீதிமன்றங்களில் இந்த விடயங்களைக்  குறிப்பிட்டு சட்டரீதியான போராட்டங்களை நடத்தியிருந்தாரெனில் இவருக்கு இப்போது வந்துள்ள ரோசம் நியாயமானதென்று சொல்லலாம்.

எண்ணிக்கையில் கூடுதலாக உறுப்பினர்கள் இருந்த போதும் தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பு  முஸ்லீம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து இவரை முதலமைச்சராக்கவும் சம்மதித்தது.  வடக்கு கிழக்கு மாகாண கல்வி அதிகாரியாக இருந்த திரு. தண்டாயுதபாணி  கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில நாட்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாராவது இருந்தால் தன்னுடன் தொடர்பு கொண்டால் (முஸ்லீம் ஆசிரியர்களே இலக்கு) தான் நிவர்த்தி செய்வதாக   நசீர் அறிவித்தார். இது கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியின் ஆளுமையைக்  கேள்விக்குட்படுத்தும் விடயம். அச்சமயம் கிழக்கு மாகாண சபை ஹாபீஸ் நசீர் அகமத்தின் வாப்பாவின் சொத்தல்ல எனத்  தண்டாயுதபாணி கொதித்தெழும்பினாரா? அப்படி சொல்லிருந்தால் நஸீரின் பிரதிபலிப்பு என்னவாக இருந்திருக்கும்? சிறுபான்மை இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன் தான் நஷீரை முதலமைச்சராக்க கூட்டமைப்பு சம்மதித்தது.நிர்வாக ரீதியான எந்த குழப்பங்கள் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றபோதும்  இனஉறவு பாதிக்கப்படும் என்ற வகையில்தான் எஞ்சிய ஆட்சிக்காலத்தில் பின் அரைப்பகுதியில் தமிழரை முதலமைச்சராக்க வேண்டும் என்று  கூட்டமைப்பு நிபந்தனை விதிக்கவில்லை. கூட்டமைப்பு செய்த விட்டுக்கொடுப்பு அவர்களது வாக்கு வங்கியில் ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து வந்த தேர்தல்களில் காணமுடிந்தது.நஸீர் படிக்கவேண்டிய குறள் இது  "யாகாவாராகினும் நாகாக்ககாவாக்கால் சோகாப்பர் சொல்லிழுகப்பட்டு "  

அமைச்சர் நஸீரின் கருத்துக்கெதிராக தற்போது முஸ்லீம் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன என்பது ஆறுதலான செய்தி

                                                                  ***

காலத்துக்குக் காலம் தாமே துட்டகைமுனுவின்வாரிசு என நிறுவ சிங்கள அரசியல் வாதிகள் முற்பட்டதுண்டு.  அந்த நீண்ட பட்டியலில் தற்போதுள்ளவர்களில் விமல் வீரவன்ச போன்றோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேற முனைகிறார் சரத் வீரசேகரா. இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்பது இவரது நிலைப்பாடு.பாராளுமன்ற உரைகளில் நீதிமன்றை அவமதித்தவர். தற்போது பெரும்பாலும் வடக்குடன் தொடர்பில்லாத சிங்களவர்களை  பேரூந்துகளில் அனுப்ப ஏற்பாடு செய்த இவர் குருந்தூர் மலைபொங்கல்விழாவில் அட்டகாசம் புரிய வைத்துள்ளார்.

அனுமதி இன்றி வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணியாகச் சென்றதாகச்   சிறீதரன் போன்றோர் மீது வழக்கு தொடர்ந்த பொலிசார் இதே காலப்பகுதியில் பிக்குகள் கொழும்பில் அரசியல் அமைப்பின் ஒரு பகுதியை தீயிட்டு கொளுத்தியமைக்கெதிராக  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தாமே சட்டமேதைகள் என்று தம்பட்டமடிக்கும் தமிழ் சட்டத்தரணிகள் அரசியலமைப்பின் சில பகுதிகளை தீயிட்டு எரித்த விடயம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை.

ரணிலுக்கு பதிலாக மகிந்தாவை பிரதமராக மைத்திரி நியமித்த போது இரவு பகலாக கண் விழித்து சட்டங்களை திரும்பத் திரும்பத் வாசித்து நீதிமன்றில் வாதாடியவர்கள் இந்த விடயத்தில் ஏன் கவனம் எடுக்க வில்லை என்று தெரிய வில்லை. அவ்வாறு எடுத்திருந்தால் குருந்தூர் மலையில் நீதி மன்ற உத்தரவை மீறும் துணிவு பிக்குகளுக்கு வந்திருக்காது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீவிரப்படுத்தியிருந்தால் பொலிசார் சப்பாத்துக்காலால் உதைக்கும் நிலை தோன்றியிருக்காது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு தொடங்கி தொடர்ந்து பொலிசார், படையினர் மேற்கொண்ட அடாவடிக்கு கெதிராக உருப்படியான நடவடிக்கைகள் தண்டனைவழங்கல்கள்   போன்றவை இடம்பெறாததே குருந்தூர்மலை விவகாரத்தில் அண்மையில் இடம் பெற்ற சம்பவங்களுக்கு காரணம். எப்படியோ சிங்களவர் மத்தியில் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளார் வீரசேகர.

பொதுவாக முறையாக அடி விழும்போதுதான் சிங்களவர்கள் சமாதானம் பற்றி யோசிப்பார்கள் ; கதைப்பார்கள். விஜயதுங்கா காலத்தில் அடி விழுந்த போதுதான் சமாதானம் பற்றி உருக உருக கதைத்த சந்திரிகாவுக்கு வாக்களித்தார்கள். சந்திரிகா காலத்தில் ஆனையிறவு முதலான தாக்குதல்களின் பின்னரே சமாதானம் பற்றி கதைத்த ரணிலுக்கு வாக்களித்தார்கள்.இப்போது அடிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் தான் நண்டு சிண்டுகளெல்லாம் வீரம் கதைக்கின்றனர்.1986 காலத்தில் புலிகளின் பலத்தை விளங்கிய  படியால் தான் சரத் வீரசேகர வின் அண்ணர் மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகர கைதிகள் பரிமாற்றம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்க கப்டன் கொத்தலாவல போன்றோருக்கு அனுமதிவழங்கினார். "இரு நாடுகளுக்கிடையில்தான் கைதிகள் பரிமாற்றம் நடைபெறமுடியும்" என்று அடம்பிடித்த லலித் அத்துலத் முதலி போன்றோரையும் வழிக்கு கொண்டு வந்தார். இறுதிக்கு காலத்தில் உண்மையான பௌத்தரான அவர்பிக்குவாக மாறிப்போனார்.அந்தக் குடும்பத்துக்கு திருஷ்டிப்  பூசணிக்காயாக வந்த சரத் வீரசேகர தான் இந்த ஆட்டம் ஆடுகிறார்.

                                                                        *** 

தமிழ் பேசும் மக்களிடையே நல்லுறவு உண்டாக்கக்கூடாது என்று தீவிரமாக இருப்போரில் மட்டு மாவட்ட முன்னாள் எம் பி சீனித்தம்பி யோகேஸ்வரன் தலையானவர்.போராளிகளின் வரலாற்றையோ, போராட்ட பங்களிப்போ இவர் ஒரு பொருட்டாக மதித்தவரல்ல. அண்மையில் மட்டு மாவட்ட  எம்பி வியாழேந்திரன் வெளியிட்ட தகவலில் கிழக்கில் தமிழரின் விகிதாசாரம் 38 விகிதத்தை விட சற்றுத்தான் அதிகமாக உள்ளது. இந்த நிலையை விளங்காமல் தமிழரசுக்கட்சியின் கூட்டங்களில்  முஸ்லிங்களுக்கெதிரான உணர்வை வெளிப்படுத்தி வருபவர். சிவசேனாவின் மட்டக்களப்பு  மாவட்ட அமைப்பாளரான  இவரை மீண்டும் கல்குடா தொகுதி தலைவராக நியமிக்க எப்படித்தான் முடிவெடுத்தனரோ?  நீண்டகால அடிப்படையில்  தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்துக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவர் இவர். ஏன் சிவசேனாவின் அமைப்பாளராக இருப்பவரின் கீழ் தமிழ் கத்தோலிக்க வாக்குகளின் நிலையை தக்க வைக்க முடியுமா ? எனக் கட்சித் தலைமையும் உணர்வதாக தெரியவில்லை.

இந்த  மும்மணிகளோ - மும்மூர்த்திகளோ இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு, ஐக்கியம் விட்டுக்கொடுப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம். அதாவது நஷீர், சரத் வீரசேகரா,  யோகேஸ்வரன் ஆகியோர் ஏதோ ஒரு வகையில் ஒரே நேர்கோட்டில் உள்ளனர்.


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post