தேசியத் தலைவர் 17.05.2009 அன்று வீரச்சாவு பசீர் காக்கா!

தமிழீழ தேசியத் தலைவர் 17.05.2009 அன்று வீரச்சாவு என்பதை உறுதிப்படுத்தினார் முன்னாள் போராளி பசீர் காக்கா.

நடந்து முடிந்ததே வரலாறு ;  இதில்

தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை!

2009இன் பின் தாயகத்திலும் உலகப் பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நின்ற வினா எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது.

 இதற்கு 23 ஜூன் 2018ஆம் நாளில் வெளிவந்த புதுவிதி இதழில் சத்தியசோதனை என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அவர் எமது மனங்களில் மட்டுமே வாழ்கிறார் என்பதை வலியுறுத்தியிருந்தேன்.

பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் களநிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையைப் புரிந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட காணொளிகளை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம்-பங்களித்தோம் என்ற உணர்வினைப் பெற்றனர்.

தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண்தூவி வீரவணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அப்படியிருக்கையில் துவாரகாவின் பெயராலும் மோசடி செய்யும் ஈனப் பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்துலகப் பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த திரு.கே.பி மற்றும் அம்பாறை மாவட்டச் சிறப்புத்தளபதி ராம், பிராந்திய அரசியல்துறைப்பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்குத் தெரியப்படுத்தினர்.

அந்த நாள் 17மே 2009 எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என அடிக்கடி சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்கவேண்டும்.

உத்தியோகபூர்வமாகத் தலைவரால் நியமிக்கப்பட்ட இம் மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்ய முனைய மாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏற்கனவே நடந்து முடிந்ததே வரலாறு. இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை.

பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியலல்ல.

 நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

வேறு எந்த சக்திகளின் முடிவுகளையும் அமுலாக்கும் விதமாக வரலாற்றை மாற்றியமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

 தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் எனது காலடிகளும், நான் பயணித்த துவிச்சக்கரவண்டிகளின் தடங்களும் பதிந்துள்ளன என்ற உரிமையில் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். தலைவரை மனதில் பதியவைத்து சிந்தித்தால் எல்லாமே சரியாக நடக்கும் என நம்புகிறேன்.

நன்றி

இவ்வண்ணம்

உண்மையுள்ள

மு.மனோகர் (மு.அறிவன்)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post