தமிழகக் கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் கைது !


கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியர்களிடம் விசாரணை!

தமிழகக் கடல் வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இராமநாதபுரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 27 பேர் படகு ஒன்றின் மூலம் கடல் வழியாக கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி தூத்துக்குடிக்குச் சென்றனர்.

கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டு மதுரையில் தங்கியிருந்த 27 பேரையும் இராமநாதபுரம்,  மதுரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் தடுத்து வைத்தனர்.

இதற்கிடையில் இலங்கையில் இருந்து கனடா தப்பிச் செல்ல மங்களூருவில் பதுங்கியிருந்த இலங்கை தமிழர்கள் 32 பேரை மங்களூர் கியூ பிரிவு பொலிஸார் ஜூன் மாதம் 11ஆம் திகதி மாலை கைது செய்தனர்.

இவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டணத்தில் சிலர் அடைக்கலம் கொடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து மர்மப் படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணையில் தெரியவந்தது.

அதன்படி இலங்கை தமிழர்கள் சிலரை மங்களுரூ தனிப்படையினர் ஜூன் மாதம் 20ஆம் திகதி அழைத்து, வேதாளை கடல் பகுதியில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

பல்வேறு கோணங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாரி சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று முன்தினம் இராமநாதபுரத்திற்குச் சென்று, மண்டபம் அருகே வேதாளை,  சீனியப்பா தர்கா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளையும் பார்வையிட்டனர்.

அதன்பின்னர் இலங்கை தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரிடம் விசாரனைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி;  பகலவன் இணையம்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post